புதிய கீதை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானாலும், அடுத்து இயக்கிய கோடம்பாக்கம் படத்தின் மூலம் கோடம்பாக்கத்தையாவது கவரும் நிலைக்கு வந்தார் கே பி ஜெகன்.
அடுத்து இவர் இயக்கிய படம் ‘ராமன் தேடிய சீதை’. இதே பெயரில் எம் ஜி ஆர் ஜெயலலிதா நடித்த படம் ஒன்று உண்டு. ஆனால் அந்தப் படத்தில் ராமன் தனக்கான சீதையைத் தேடுகிறான் என்றுதான் கதை போகும்.
ஜெகன் இயக்கிய ‘ராமன் தேடிய சீதை’யில், ராமன் தேடிய சீதை. ராமனைத் தேடிய சீதை என்று இரண்டு ரூட்டிலும் கதை போகும். எனினும் படம் பெரிதாகப் போகவில்லை.
அடுத்து மிக வித்தியாசமான பெயராக,” என் ஆளோட செருப்பக் காணோம் ” என்ற பெயரில் ஒரு படம் இயக்கினார். பெயர் பெரிதாகப் பேசப்பட்ட அளவுக்கு படம் பேசப்படவில்லை. தியேட்டரில் கூட்டத்தைக் காணோம் என்ற நிலைதான் ஏற்பட்டது.
சற்றும் மனம் தளராமல் சில படங்களில் நடித்தார். சில படங்களுக்கு கதை வசனம் எழுதினர். பாண்டிராஜிடம் அசோசியேட் டைரக்டராக வேலை பார்த்தார்.
இதோ அடுத்த படத்துக்கு ரெடியாகி விட்டார்.
அடுத்து அவர் கதை நாயகனாக நடித்து இயக்கும் படத்துக்குப் பெயர் ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’.
”ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தில் மூன்று கதைகள் ஓர் நேர்கோட்டில் பயணிப்பதுதான் திரைக்கதையின் சுவாரஸ்யம். ஒவ்வொரு கதைக் களத்திற்கும், ஒரு பாடல் என்ற விதத்தில் மூன்று பாடல்களும், மூன்று கதைகளையும் இணைக்கும் இடத்தில் நான்காவதாக ஒரு பாடலும் இடம் பெறுகிறது. ” என்கிறார் ஜெகன்.
இந்தப் படத்தின் முதல் போஸ்டரிலும் ஒரு கையில் ஷூவை வைத்துக் கொண்டு நிற்கிறார். ஒருவேளை அவர் ஆளின் ஷூவைக் காணோம் என்று ஏதாவது கிளைக்கதை வருமோ என்னவோ?
- ராஜ திருமகன்
