ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதமடித்து ஃபார்முக்கு திரும்பிய விராட் கோலியை, அணி கேப்டன் ரோகித் சர்மா பாராட்டும் வீடியோவை பிசிசிஐ இன்று (செப்டம்பர் 9) வெளியிட்டுள்ளது.
ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் நேற்று நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலி மற்றும் கே.எல் ராகுலின் அதிரடியான ஆட்டம் வெற்றிக்கு வித்திட்டது.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 76 பந்துகளில் 119 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி, நேற்றையப் போட்டியில் 61 பந்துகளில் 122 ரன்கள் குவித்தார்.
இது சர்வதேச டி20 போட்டியில் கோலியின் முதல் சதமாகும். மேலும் சர்வதேச போட்டியில் 1020 நாட்களுக்கு பிறகு கோலி அடித்த 71வது சதமாகும்.

ஆசியகோப்பை முன்னதாக கோலியின் பேட்டிங் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அவற்றுக்கு தனது அதே பேட்டிங் திறமையால் தகுந்த பதிலடி தந்துள்ளார் விராட் கோலி.
அவர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியதை அடுத்து பலரும் பாராட்டி சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிசிசிஐ வெளியிட்ட வீடியோ!
விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து விலக்கி, ரோகித் சர்மாவுக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து இருவருக்கும் இடையே மோதல் நிலவி வருவதாக தொடர்ந்து வதந்திகள் கிளம்பின.
ஆனால், இருவரும் பல்வேறு சூழ்நிலைகளில், அதுவும் ஒருவரின் கடினமான சூழ்நிலையில் மற்றொருவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ள வீடியோ இருவரும் ஒருவர் மீது கொண்டுள்ள நட்பையும், மரியாதையையும் வெளிப்படுத்தியுள்ளது.
அணியின் அணுகுமுறையால் நிதானமாக உணர்ந்தேன்!
ரோகித்துடன் நேரடியாக கோலி உரையாடிய அந்த வீடியோவில், “ தொடர்ந்து 14 வருடங்கள் விளையாடிய பிறகு, கிட்டத்தட்ட ஒரு மாதமாக நான் பேட்டை எடுக்கவில்லை.
நான் மீண்டும் அணிக்கு வந்தபோது, உங்களிடமிருந்தும் (கேப்டன் ரோகித் சர்மா), நிர்வாகத்திடமிருந்தும் என்னிடம் இருந்தும் ’என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்’ என்பதை தெளிவாக உணர்ந்தேன்.
என்னை சிறப்பாக பேட்டிங் செய்ய விட வேண்டும் என்பதே அணி நிர்வாகத்தின் திட்டமாக இருந்தது. இந்த அணுகுமுறை என்னை பதட்டமில்லாமல், நிதானமாக என்னை உணர வைத்தது.
அணி நிர்வாகம் எனக்குக் கொடுத்த இடம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக நான் ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பி வந்தபோது, நான் உற்சாகமாக இருந்தேன் மற்றும் அணிக்கு தேவையான பங்களிப்பை வழங்க ஆவலுடன் எதிர்பார்த்தேன்.
நான் நன்றாக விளையாடினால், அது நிச்சயம் அணிக்கு உதவும் என்று எனக்குத் தெரியும்” என்று கூறினார்.

எது என்னுடைய பலம் அல்ல?
மேலும், ”டி20 கிரிக்கெட்டில் மிடில் ஓவர்களில் ஸ்ட்ரைக் ரேட் மூலம் நான் சிறப்பாக விளையாட இந்திய அணியின் பயிற்சியாளரான டிராவிட், கடந்த 3-4 நாட்களாக எனக்கு அறிவுரை வழங்கி வந்தார்.
அதனை ஆசிய கோப்பையில் செய்ய முயற்சித்தேன். சிக்ஸ் அடிப்பதை எனது பலமாக நான் கருதியதில்லை. சூழ்நிலை தேவைப்படும்போது அதை என்னால் செய்ய முடியும்.
அதே வேளையில் எதிரணியின் பீல்டிங்கில் இருக்கும் இடைவெளியில் பவுண்டரிகளை அடிப்பதை தான் எனது பலமாக நான் கருதுகிறேன். இது தான் எனது பழைய ஃபார்முக்கு திரும்ப உதவியது” என்று கூறினார்.

கோலியின் அபாரமான ஆட்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!
தொடர்ந்து கோலி குறித்து ரோகித் சர்மா கூறுகையில், “ பெரிய ஹிட்டிங்கில் அதிக கவனம் செலுத்தாமல் உங்கள் இன்னிங்ஸை எவ்வாறு வடிவமைப்பது என்பதற்கு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கோலியின் அபாரமான ஆட்டம், ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
நீங்கள் நீண்ட நேரம் பேட்டிங் செய்வதை நான் நேரிடையாக பலமுறை பார்த்தவன் என்ற முறையில் எனக்கு அது தெரியும். நீங்கள் கிரிக்கெட்டில் 3 வடிவங்களிலும் விளையாட வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருந்தது.
உங்கள் ஃபார்ம் அணிக்கு மிகவும் முக்கியமானது. நீங்கள் சிறப்பாக விளையாட, அணி வீரர்கள் ரிலாக்ஸாக இருப்பதை உணர முடிகிறது” என்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா