சவுரவ் கங்குலிக்கு பதிலாக பிசிசிஐ தலைவராக 1983 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ரோஜர் பின்னி நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர், துணைத் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கான தேர்தல் அக்டோபர் 18ம் தேதி நடைபெற உள்ளது.
இதனையடுத்து அந்த பதவிகளில் அமரப்போகிறவர்கள் யார் என்ற கேள்வி சமீப காலமாக தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
தற்போது பிசிசிஐ தலைவராக இருக்கும் இந்திய அணியின் முன்னாள் வீரரான கங்குலி அந்த பதவியை தொடர போவதில்லை என்று கூறப்பட்டு வந்தது.
அதன்படி கடந்த 6ம் தேதி பிசிசிஐ இணையதளத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் ரோஜர் பின்னியின் பெயர் இடம்பெற்றுள்ளது.
யார் இந்த ரோஜர் பின்னி?
ரோஜர் மைக்கேல் ஹம்ப்ரி பின்னி என்ற ரோஜர் பின்னி 1983 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஆவார்.

உலகக் கோப்பை மட்டுமின்றி, 1985ம் ஆண்டு நடைபெற்ற உலக கிரிக்கெட் சாம்பியன்ஷிப் வென்ற இந்திய அணியிலும் பின்னி முக்கியமான இடம் வகித்தார்.
1979 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் ரோஜர் பின்னி இந்திய அணியில் அறிமுகமானார்.
அதன்மூலம் இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடிய ஸ்காட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்த முதல் ஆங்கிலோ-இந்தியர் என்ற பெருமையை பின்னி பெற்றார்.

அறிமுகமான அந்த தொடரிலேயே பாகிஸ்தான் அணியின் அபாயகரமான பேட்ஸ்மேன்களான மஜித் கான், ஜாகீர் அப்பாஸ் மற்றும் ஜாவேத் மியான்டட் ஆகியோரின் விக்கெட்டை தனது அசுர வேக பந்துவீச்சில் ரோஜர் பின்னி வீழ்த்தினார்.
இந்த தாக்குதலில் நிலைகுலைந்த பாகிஸ்தான் அணி, 131 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் வீழ்ந்தது.
ஒரு ஆக்ரோஷமான பேட்ஸ்மேன் மற்றும் சிறந்த பீல்டராக இருந்த போதும் அவரது பந்துவீச்சுதான் இந்திய அணியில் ரோஜர் பின்னியை தனித்து அடையாளம் காட்டியது.
இந்தியாவுக்காக 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 47 விக்கெட்டுகளையும், 72 ஒருநாள் போட்டிகளில் 77 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
1986 ஆம் ஆண்டு ஹெடிங்லேயில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 58 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் சாய்த்தார். இது அவரது சிறந்த பந்துவீச்சாக பார்க்கப்படுகிறது.

உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகள்!
1983 உலகக் கோப்பை அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் புகழ்பெற்ற காலகட்டமாகும். அந்த தொடரில் அதிகபட்சமாக 18 விக்கெட்டுகளை வீழ்த்தி கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார்.
2000 ஆம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளராக ரோஜர் பின்னி இருந்தார்.

தொடர்ந்து 2007ம் ஆண்டு வங்காளத்தின் பயிற்சியாளராக இருந்தார். பின்னர் 2012 அன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் தேர்வுக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
கங்குலி ஐசிசி தலைவர்?
இந்நிலையில் தான் சவுரவ் கங்குலிக்கு பதிலாக பிசிசிஐ தலைவர் பதவியில் 67 வயதாகும் ரோஜர் பின்னி அமரப்போகிறார் என்று கிரிக்கெட் வட்டராங்கள் தெரிவித்துள்ளன.
அதே நேரத்தில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அதே பதவியில் நீடிப்பார் என்றும், நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஐசிசி தலைவர் தேர்தலில் கங்குலி போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
கிறிஸ்டோபர் ஜெமா
