நள்ளிரவில் மெரினா கடற்கரையில் பெண் ஒருவரின் கழுத்தை அறுத்து நகை பணம் பறிக்க முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கொள்ளை கும்பல் 4 பேரில் மூன்று பேர் தப்பித்துவிட ஒருவரை போலீசார் கடலுக்குள் குதித்து பிடித்துள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரை பகுதியில் பட்டினப்பாக்கம் செல்லக் கூடிய சர்வீஸ் சாலையில் நள்ளிரவு 1.30 மணியளவில் ஆட்டோ ஒன்று நின்றுள்ளது. அதில் பெண் ஒருவர் இருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் மழை காரணமாக நாங்களும் இங்குச் சற்று நேரம் நின்றுவிட்டுக் கிளம்பிவிடுகிறோம் என்று கூறியிருக்கின்றனர். அவர்கள் மது போதையிலும் இருந்துள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் திடீரென அந்த பெண்ணின் கழுத்தை அறுத்து, அவர் அணிந்திருந்த தங்க கம்மல் மற்றும் கையில் இருந்த பணத்தைப் பறித்துக்கொண்டு தப்பித்து ஓடினர்.
அப்போது லேசாக காயமடைந்த அந்த பெண் கூச்சலிடவே அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த கும்பலைத் துரத்திச் சென்றனர்.
இதில் 3 பேர் தப்பித்துவிட்ட நிலையில், ஒருவர் கடலுக்குள் குதித்து தப்பிக்க முயன்றார்.
பின்னர் போலீசாரும் கடல் அலையில் இறங்கி தப்பிக்க முயன்ற அந்த நபரை பிடித்து கரைக்கு இழுத்து வந்தனர்.
அவரிடம் விசாரித்ததில் அந்த நபர், அயனாவரத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பது தெரியவந்தது. தப்பியோடியவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
மெரினாவில் நள்ளிரவில் இதுபோன்ற கொள்ளச் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக அங்கிருக்கும் கடை வியாபாரிகள் கூறுகின்றனர். மெரினாவில் உள்ள கடைகளில் கடந்த மாத இறுதியில் மட்டும் 7 முறை கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.
பிரியா

Comments are closed.