திருவான்மியூர் எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம்-ல் நூதன முறையில் கொள்ளையடித்த வடமாநில கும்பலை போலீசார் கைது செய்தனர். robbery at SBI ATM
சென்னை திருவான்மியூர் திருவள்ளுவர் நகரில் எஸ்.பி.ஐ வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணம் எடுக்க வருபவர்கள், பணம் எடுக்க முடியாமல் திரும்பி சென்றனர்.
எடிஎம் கார்டு பின் நம்பர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவிட்டும் பணம் எடுக்க முடியாமல் போவது தொடர்ந்து வந்தது. இதனால் ஏடிஎம் மிஷினில் தான் ஏதோ பிரச்சினை என்று சில வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்தநிலையில் மும்பையைச் சேர்ந்த ஏடிஎம் சேவை நிறுவனத்தின் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு, திருவான்மியூரில் நடக்கும் கொள்ளை குறித்து தெரியவந்தது. இந்தநிலையில் ஏடிஎம் சேவை நிறுவனத்தின் சென்னை ஊழியர் நரேன்குமார் திருவள்ளுவர் நகரில் உள்ள ஏடிஎம் மையத்துக்கு சென்று அதனை சரிபார்த்தார்.
அப்போது, ஏடிஎம்-ன் பணம் எடுக்கும் பகுதியில் கருப்பு அட்டை வைத்து அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து திருவான்மியூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் விசாரணையில் இறங்கினர். இதில் சிசிடிவியை ஆராய்ந்ததில், திருவான்மியூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்கள் குல்தீப் சிங் (26), பிரிஜ்பன் (30) மற்றும் சுமித் யாதவ் (30) என அடையாளம் காணப்பட்டனர். இந்த மூவரும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இந்த கும்பல் ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் பகுதியை அடைத்துவிட்டு, வாடிக்கையாளர்கள் வந்து பணம் எடுக்க முயற்சிக்கும் வரை வெளியே காத்திருக்கும். இவர்கள் கருப்பு அட்டையை கொண்டு பணம் எடுக்கும் வாய் பகுதியை அடைத்து விடுவதால், பணம் வெளியே வராது. அதனால் பணம் வரவில்லை, மிஷினில் தான் ஏதோ பிரச்சினை என்று வாடிக்கையாளர்கள் சென்றுவிட, இந்த கும்பல் உள்ளே புகுந்து கருப்பு அடையை எடுத்துவிட்டு பணத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடும் .
இதுபோன்று தாம்பரம் உட்பட பல்வேறு பகுதிகளில் செயல்படும் ஏடிஎம்-களிலும் இந்த கொள்ளை கும்பல் பணத்தை திருடியிருக்கிறது.
போதுமான பணம் கையில் கிடைத்தவுடன் இந்த மூவரும் உத்தரப் பிரதேசம் சென்றுவிடுகின்றனர். வார இறுதிநாட்களில் வங்கிகள் செயல்படாது என்பதால், எடிஎம் பிரச்சினை தொடர்பாக புகார் அளிக்க முடியாது. இதனை பயன்படுத்தி சனி, ஞாயிறுகளில் வாரம்தோறும் இந்த கும்பல் சென்னையை சுற்றி வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. robbery at SBI ATM
