ஆயுத பூஜையை முன்னிட்டு பொரி தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ள நிலையில் நடப்பாண்டு மூட்டைக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை விலை உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் விமர்சையாகக் கொண்டாடப்படும் பண்டிகை சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையில் முக்கிய பூஜை பொருளாக பொரி பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 11, 12 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படும் ஆயுத பூஜையை முன்னிட்டு பொரி தயாரிக்கும் பணி தமிழகத்தில் நாமக்கல், சேலம், தருமபுரி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது.
இப்படி உற்பத்தி செய்யப்படும் பொரி மதுரை, திண்டுக்கல், சென்னை, கோவை என தமிழகம் முழுவதும் இருந்து வியாபாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தற்போது தொழிலாளா்கள் பற்றாக்குறையால் உற்பத்தியாளா்கள் நவீன இயந்திரங்களை கொண்டு பொரி உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதுகுறித்து பேசியுள்ள கரூர் மாவட்டத்தில் பொரி தயாரிக்கும் பணியில் ஈடுபடுவோர்,
“நாங்கள் மூன்று தலைமுறையாக பொரி தயாரித்து வருகிறோம். கையால் தயாரிக்கப்படும் பொரி என்பதால், சுவை மிகுந்தது. இதை சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.
இந்த ஆண்டு நெல் விலை அதிகரிப்பு, மின்சாரக் கட்டணம், டீசல் விலை, கூலி உயா்வு போன்ற பல்வேறு காரணங்களால் உற்பத்தி செலவு 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதனால் பொரி விலை கடுமையாக உயர வாய்ப்புகள் உண்டு.
கடந்த ஆண்டு 50 பக்கா கொண்ட ஒரு மூட்டை பொரி ரூ.500 வரை விற்பனை செய்யப்பட்டது. நடப்பாண்டு மூட்டைக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை விலை உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு நல்ல விலை கிடைத்துள்ளதால், பொரி தயாரிப்பவர்களும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்.
பண்டிகை நீங்கலாக, பிற காலத்தில், பானிபூரி, மிக்சர் உட்பட பல உணவுப் பொருள்களுடன் கலக்கவும், கோயில், வீடு , கடைகளில் தினசரி பூஜையில் வைக்கவும், ரெகுலராக பொரியை வாங்கிச் செல்கின்றனர்.
ஆயுத பூஜை நெருங்க நெருங்க தேவைகள் அதிகரிக்கும் என்ற காரணத்தால் முன்கூட்டியே உற்பத்தியை அதிகரிக்கத் தொடங்கியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மக்களாட்சி வரலாற்றில் தி.மு.க: பவள விழாவும், பயணத்தின் தொடர்ச்சியும்!
டாப் 10 நியூஸ் : அதிமுக போராட்டம் முதல் ஜூனியர் டாக்டர்கள் பணிநிறுத்தம் வரை!