அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ உள்ளிட்ட பொதுக் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஜனவரி 5-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், கடந்த செப்டம்பர் 27-ந் தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.
இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ உள்ளிட்டவைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்க கோரி பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால், அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.
இந்நிலையில் இவ்வழக்கில் இன்று (டிசம்பர் 19) தீர்ப்பளித்த தலைமை நீதிபதி ஸ்ரீவத்சவா, நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜனவரி 5-ந் தேதிக்குள் வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
