மும்பை கோகிலாபென் அம்பானி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்க்கு முழங்காலில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 30ம் தேதியன்று அதிகாலையில் டெல்லியில் இருந்து உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது தாயாரைப் பார்க்க இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்ஸ்மனுமான ரிஷப் பந்த் சென்றார்.
ஆனால் 5.30 மணியளவில் டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் அவரது கார் சாலைப் தடுப்பு மீது மோதி தீப்பிடித்து முற்றிலுமாக உருக்குலைந்தது.
இதில் கார் கண்ணாடியை உடைத்து படுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ரிஷப் பண்ட்டை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்கு நெற்றியில் ஏற்பட்ட வெட்டுக்காயத்துக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பிசிசிஐ ஏற்பாட்டின்படி மேல்சிகிச்சைக்காக மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு ரிஷப் மாற்றப்பட்டார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று காலை 10:30 மணியளவில் அவருக்கு வலது முழங்காலில் தசைநார் கிழிவு அறுவைசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுக்குறித்தான அறிக்கையை முதன்முறையாக கோகிலாபென் மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ளது.
சுமார் 2-3 மணி நேரம் நீடித்த இந்த அறுவை சிகிச்சையை மருத்துவர் தின்ஷ பார்திவாலா மற்றும் அவரது குழுவினர் சுமூகமாக செய்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் ரிஷப் தனது காயங்களிலிருந்து முழுமையாக குணம் பெற 6 முதல் 9 மாதங்கள் ஆகும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இதனால் இந்தாண்டில் நடைபெற இருக்கும் ஐபிஎல், ஆசியக் கோப்பை மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையில் ரிஷப் பண்ட் பங்கேற்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: தற்கொலைக்கு முயன்ற 4 பேர் மீது வழக்கு!
‘ரெட் ஜெயண்ட்’ என்று சொல்ல பயமா?: திருமாவுக்கு நாராயணன் திருப்பதி கேள்வி!
