கடந்த 2008ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள முசாபர் நகரில் ஸ்காலர்ஷிப் மோசடியை முறியடித்தவர் ரிங்கு சிங் ராஹி. 100 கோடி ரூபாய் மோசடியை வெளிப்படுத்திய சில நாட்களில் சமூகநல அலுவலராகப் பணியாற்றிய ரிங்கோ தாக்கப்பட்டார். அவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஏழு குண்டுகள் பாய்ந்தன. அதனால் அவர் செவிப்புலனையும் ஒரு கண்ணையும் இழந்தார். இந்தக் குற்றத்தில் எட்டு பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு, நான்கு பேருக்கு மட்டுமே 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற நால்வரும் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் விடுவிக்கப்பட்டனர்.
ஸ்காலர்ஷிப் மோசடி வழக்கில் சுடப்பட்ட ரிங்கு ஒரு மாத காலம் சிகிச்சையில் இருந்தார். பின்னர் பல பணியிடங்கள் மாற்றப்பட்டு தற்காலப் பணி நீக்கங்களையும் அனுபவித்தார். மேலும் சில நாட்களுக்கு அவர் மனநல காப்பகத்திற்கு அனுப்பப்பட்டார். ஸ்காலர்ஷிப் மோசடி வழக்கு தொடர்பாக அவருக்கு அவ்வப்போது மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன.
ரிங்கு சிங் ராஹி தற்போது ஐஏஎஸ் பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இந்த மையத்தில் பல ஆண்டுகளாக சிவில் சர்வீஸ் ஆர்வலர்களுக்குப் பயிற்சியும் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் அவர் 2021ஆம் ஆண்டில் நடந்த யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “சக மாணவர்களின் வற்புறுத்தலின்படி நான் இந்தத் தேர்வை எழுதினேன். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். இந்தியாவில் நேர்மையானவர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால், பாதகமான சூழ்நிலை ஏற்படும் போதுதான் நேர்மைக்கான சோதனை வருகிறது. நேர்மைக்கும் ஊழலுக்கும் இடையிலான போராட்டத்தில், ஊழல் அமைப்பு மிகவும் பலவீனமானது, ஓர் இடத்தில் தவறு நடந்தாலும் ஊழல் மொத்தமாக வெளிப்பட்டுவிடும்” என்று கூறியுள்ளார்.
