வீக் எண்டில் வித்தியாசமாக என்ன செய்யலாம் என்று நினைப்பவர்கள் இந்த ரைஸ் டிக்கியா செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்தலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் இதை விரும்பி சுவைப்பார்கள்.
என்ன தேவை?
வடித்த சாதம் – ஒரு கப்
பெரிய வெங்காயம் – கால் கப் (நறுக்கவும்)
உருளைக்கிழங்கு, கேரட் – தலா ஒன்று (வேகவைத்து மசிக்கவும்)
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
ஓமம், மல்லித்தூள் (தனியாத்தூள்) – தலா அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிது
பொட்டுக்கடலை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, பச்சை மிளகாய் விழுது, மல்லித்தூள் (தனியாத்தூள்), மசித்த உருளை, கேரட், உப்பு சேர்த்து வதக்கவும். இதனுடன், மஞ்சள்தூள், ஓமம், வடித்த சாதம் சேர்த்துக் கலந்து, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தூவிக் கிளறி அடுப்பை அணைக்கவும்.
கலவை ஆறியதும் விருப்பமான வடிவங்களில் கட்லெட் செய்து, பொட்டுக்கடலை மாவில் புரட்டி, அரை மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்து, சூடான எண்ணெயில் பொரிக்கவும். அதிக எண்ணெயை தவிர்க்க நினைப்பவர்கள், தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, சூடானதும் ரைஸ் டிக்கியாவை போட்டு, இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுத்து, சாஸ் உடன் சுவைக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…