ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படாததை கண்டித்து ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட தயாராகி வருகின்றனர். Retired nutritional food workers warn
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மேலவை உறுப்பினர்களின் குடும்ப ஓய்வூதியத்தை அரசு இன்று (ஏப்ரல் 26) உயர்த்தி அறிவித்திருக்கும் நிலையில், ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் மாயமலை மின்னம்பலத்திடம் கூறுகையில், “40 ஆண்டுகள் பணி செய்து ஓய்வு பெற்று இன்றுவரை 2000 ரூபாய்தான் ஓய்வூதியம் பெற்று வருகிறோம். எங்களது ஓய்வூதிய திட்டத்தை சிறப்பு பென்ஷன் கேட்டகிரி திட்டத்தில் கொண்டு வந்து 6,750 ரூபாய் பென்ஷன் கேட்டு வருகிறோம்.
அப்படி இல்லை என்றால் குறைந்தபட்ச சேகண்ட் கேட்டகிரியில் 3,375 ரூபாயாவது பென்ஷன் வழங்க கேட்டு போராடி வருகிறோம். ஆனால் இந்த அரசு மானிய கோரிக்கையில் ஓய்வு பெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு ஓய்வூதியத்தை ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரமாக உயர்த்தியிருக்கிறது. Retired nutritional food workers warn
முன்னாள் சட்டமன்ற பேரவை உறுப்பினர்களின் குடும்ப ஓய்வூதியம் மாதம் ரூ.15,000-லிருந்து ரூ.17,500 ஆக உயர்த்தியிருக்கிறது.
ஆனால் 40 வருட காலமாக அனலில் எரிந்து பணி செய்தவர்களுக்கு பல வருடமாக போராடியும் 2,000 கூட உயர்த்தி கொடுக்க மறுக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இந்த அரசு எங்களது கோரிக்கைகளை கவனத்தில் கூட கொள்ளவில்லை.
ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சுமார் ஒரு லட்சம் பேர் இருக்கிறார்கள். எங்கள் கோரிக்கை நிறைபேற்றப்படவில்லை என்றால் எங்கள் குடும்ப உறுப்பினர்களின் வாக்குகளை எல்லாம் இந்த ஆட்சிக்கு எதிராக கொண்டு செல்வோம்” என்றார்.
நம்மை புறக்கணிப்பவர்களை…நாம் புறக்கணிப்போம் என்று ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் கூறியிருக்கிறது.

சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் நூர்ஜகான் கூறுகையில், “தமிழ்நாட்டில் மொத்தம் 44 ஆயிரம் சத்துணவு மையங்கள் உள்ளன. இங்கு பொறுப்பாளர்கள், சமையலர், சமையல் உதவியாளர் என 40 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளது. இந்த காலி பணியிடங்களில் சமையல் உதவியாளரை மட்டுமே எடுக்கிறார்கள். இந்த பணிக்கு ஐந்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும். ஆனால் இந்த அரசு சமையல் உதவியாளருக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது. அப்படியானால் 5 முதல் 8 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் நிலை என்னவாகும். இதனால் மாநில செயற்குழுவை விரைவில் கூட்டி போராட்டத்தை நடத்த திட்டமிட்டு வருகிறோம்” என்றார்.
மேலும் அவர், “1982 ஜூலை மாதம் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். அப்போது சமையலர், சமையல் உதவியாளர்கள் மதிப்பூதியம் அடிப்படையில் வேலையில் பணியமர்த்தப்பட்டனர்.
1983ல் சத்துணவு திட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
1996ல் அதிமுக ஆட்சி முடியும் தருவாயில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது மதிப்பூதியத்தை ரத்து செய்து, சிறப்பு காலமுறை ஊதிய திட்டத்தை கொண்டு வந்தார்.
அதன்பிறகு 2008ல் கலைஞர் ஆட்சியில், சிறப்பு காலமுறை ஊதியம் ரத்து செய்யப்பட்டு வரையறுக்கப்படாத கால ஊதிய திட்டம் கொண்டு வரப்பட்டது.
அப்படிப்பட்ட திட்டத்தை கலைஞரின் மகனாகிய முதல்வர் ஸ்டாலின் ரத்து செய்துவிட்டு , 29 வருடங்களுக்கு முன்பு இருந்த மதிப்பூதிய திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்.
இதை கண்டித்துதான் தமிழ்நாடு முழுவதும் 22ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினோம்” என்று குறிப்பிட்டார்.
ஏற்கனவே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர், பழைய பென்ஷன் திட்டத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர். அதில் 2026ல் ஏமாறுவீர்கள் என்று திமுக அரசுக்கு எதிராக குறிப்பிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. Retired nutritional food workers warn