கொளுத்தும் வெயில்: சென்னை, மதுரையில் கட்டுமான பணிகளுக்கு கட்டுப்பாடு!

Published On:

| By indhu

Restrictions on open construction work! - You know what?

சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை எவ்வகையான திறந்தவெளி கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள கூடாது என அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும், தொழிலக பாதுகாப்பு இயக்ககம் இன்று (மே 14) உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கோடை வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிலும் வெப்பம் அதிகமாக இருக்கும் ‘அக்னி நட்சத்திரம்’ காலமும் மே 4ஆம் தேதி முதல் தொடங்கி வெயிலின் தாக்கத்தை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலுடன் சேர்ந்து அனல் காற்றும் வீசி வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பத்தின் அளவு பதிவாகி வருகிறது.

வெயிலின் காரணமாக அத்தியாவசிய பணிகளின்றி தேவையில்லாமல் மதிய வேளைகளில் யாரும் வெளியே வர வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் சிறப்பு ஏ.சி. வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. உப்பு கரைசல் எடுத்துக் கொள்வது, தண்ணீர் அதிகமாக அருந்துவது என பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இருந்தபோதும், பணிகளின் பொருட்டு பொதுமக்கள் வெளியே வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அந்த வகையில், வடமாநில தொழிலாளி ஒருவர் ஹீட் ஸ்டோராக்கால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு விதித்து தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை, எவ்வகையான திறந்தவெளி கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள கூடாது என அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும் தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. அதிக வெயில் காரணமாக தொழிலாளர்களின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, மே மாத இறுதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, “தற்போது நிலவி வரும் அதிக வெப்ப அலை காரணமாக தொழிலாளர்களின் உடல்நலம் பாதிப்படைவதை தடுக்கும் பொருட்டு, திறந்த வெளியில் மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுமான பணிகளும் காலை 10 முதல் மாலை 4 வரை மேற்கொள்ளக்கூடாது என அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்துமாறு சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்நடைமுறை மே மாதம் இறுதி வரை கடைபிடிக்கப்பட வேண்டும்.

இணை இயக்குநர்கள் (BOCW) மேற்கூறிய அறிவுரைகள் கட்டுமான நிறுவனங்களால் பின்பற்றப்படுவதை இணை இயக்குநர்கள் ஆய்வுகள் மூலம் உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை அலுவலகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கோள்ளப்படுகிறார்கள்.

வெப்பத்தின் காரணமாக தொழிலாளர்களின் உடல் நிலை பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலக பாதுகாப்பு இயக்கம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல் முறையாக பின்பற்றபடுகிறாதா? என்பதை சென்னை, மதுரையின் இணை இயக்குனர்கள் கண்காணிக்க வேண்டும்.” எனக்  கூறப்பட்டுள்ளது.

இந்து 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆன்மீகத்திற்கு எதிரானவனா நான்? – மேடையில் கொந்தளித்த மிஷ்கின்

கங்கையில் வழிபட்டு வேட்புமனு தாக்கல் செய்த மோடி : கலந்துகொண்ட அன்புமணி, ஜி.கே.வாசன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share