தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாளை நாகையில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ள நிலையில் மின்சார விநியோகத்தை நிறுத்த வேண்டும் என அக்கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாளை (செப்டம்பர் 20) நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மக்களை சந்திக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்
பரப்புரை இடம் மாற்றம்
நாகை மாவட்டத்தில் விஜய் நாளை பரப்புரை செய்ய திட்டமிடப்பட்டிருந்த இடம் தற்போது மாற்றப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாளை (செப்டம்பர் 20) நாகையில் புத்தூர் ரவுண்டானா பகுதியில் பரப்புரை செய்ய திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில் பாதுகாப்பு காரணமாக அந்த இடத்தில் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அதற்கு பதிலாக அண்ணா சிலை பகுதியில் பரப்புரை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதியம் 12 :30 மணிக்கு புத்தூர் அண்ணா சிலை பகுதியில் விஜய் பரப்புரை செய்ய காவல்துறை அனுமதித்துள்ளது. மேலும் 30 நிமிடங்களில் விஜய்யின் உரையை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதேசமயம் விஜய்யின் வாகனத்தை யாரும் பின் தொடரக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து திருவாரூரிலும் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
இந்நிலையில் நாளை நாகையில் தவெக தலைவர் விஜய் பரப்புரை பயணம் செல்லும் வழியில் மின்சாரத்தை நிறுத்தம் செய்ய அக்கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் மின்வாரியத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், விஜய் சாலை மார்க்கமாக புத்தூர் அண்ணாசிலை அருகில் மக்களை சந்தித்து உரையாற்ற உள்ளார்.
அப்பகுதிகளில் உயர் மின்னழுத்த கம்பி உள்ளதால் தளபதியின் விஜய் அவர்களின் நிகழ்வு தொடங்கி முடியும் வரை அவ்வழியில் உள்ள வழி தடங்களில் மின் நிறுத்தம் செய்து தரும்படியும் அல்லது மின் ஊழியர்களை நியமித்து பொதுமக்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
