பணம், பரிசு வழங்கி மதமாற்றம்: உச்ச நீதிமன்றம் வேதனை!

Published On:

| By Kalai

பணம், பரிசுப்பொருட்கள் வழங்கி கட்டாய மதமாற்றம் செய்வது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம் மதமாற்றம்தான் அறப்பணியின் நோக்கமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

கட்டாய மதமாற்றம், மூட நம்பிக்கைகளை தடுக்கக்கோரி பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், வழக்கறிஞருமான அஷ்வினி குமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு ஒரு பதில் மனுவை தாக்கல் செய்தது.

அதில், கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக மத்தியப் பிரதேசம், ஒடிசா மாநிலங்களில் இயற்றப்பட்டுள்ள சட்டத்தை ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததை குறிப்பிட்டிருந்தது.

ஒடிசா, மத்திய பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், கர்நாடகம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளதையும் மத்திய அரசு தனது பதில் மனுவில் தெரிவித்திருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.ஆர் ஷா தலைமையிலான அமர்வில் இன்று(டிசம்பர் 5) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அஷ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என எதிர்மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை நிராகரித்த நீதிபதிகள்,

“மத அறப்பணிகள் என்பது மதமாற்றத்தை நோக்கமாக கொண்டிருக்கக் கூடாது, பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் அளித்து செய்யும் மதமாற்றம் மிகவும் ஆபத்தானது, அரசியல் சாசனத்தின் அடிப்படைக்கு எதிரானது” என்று தெரிவித்தனர்.

மேலும் மதமாற்ற தடுப்புச் சட்டம் தொடர்பாக மாநிலங்களிடம் இருந்து விரிவான தகவல்களை பெற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை திங்கட்கிழமைக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

கலை.ரா

மீண்டும் தலைவரானார் பரூக் அப்துல்லா

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் முதல் பெண் சோப்தார்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share