ரிலையன்ஸ் ஷாப்பிங்கில் கேரிபேக்குக்கு 24 ரூபாய் பணம் வசூலித்ததால் பெங்களூரைச் சேர்ந்த ஒருவர் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்து 7,000 ரூபாயைத் திரும்பப் பெற்றிருக்கிறார்.
பெங்களூரைச் சேர்ந்தவர் 34 வயதான ரவிகிரண். இவர் ஜூலை 10ஆம் தேதி பெங்களூரில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடைக்கு தன் மனைவியுடன் சென்று 2,000 ரூபாய்க்கு மேல் ஷாப்பிங் செய்திருக்கிறார்.
இருப்பினும், பில்லிங் கவுண்டரில் விற்பனையாளர்கள் அவரிடம் ஒரு கேரிபேக்குக்கு 24 ரூபாய் கொடுக்கச் சொன்னதால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
முதலில் வாதிட்ட அவர்கள், பின் வேறு வழியின்றி காசு கொடுத்து கேரிபேக்கை வாங்கியுள்ளனர்.
இதன் பிறகு ரவிகிரண் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடி கேரிபேக்குக்கு பணம் வசூலித்ததற்காக ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதனால் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு நீதிமன்றம் சார்பாக சட்டப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இருப்பினும், சில்லறை விற்பனையாளர் ஆஜராகத் தவறியதால், ரிலையன்ஸ் நிறுவனம் ரவிகிரணுக்கு இழப்பீடாக 5,000 ரூபாயும் அவரது நீதிமன்றச் செலவுக்காக 2,000 ரூபாயும் வழங்குமாறு தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்தத் தீர்ப்பின் மூலம் இனி கடைகளில் கேரிபேக்குக்கு எனக் கட்டணம் விதிப்பதைக் கடைகள் நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.
-ராஜ்