எச்-1பி விசாவில் மீண்டும் சலுகை!

Published On:

| By Balaji

எச்-1பி விசா விண்ணப்ப நடைமுறையில் மீண்டும் சலுகை அளிக்கப்பட்டுள்ளதால் அதை அதிக அளவில் விண்ணப்பிக்கும் இந்தியர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிகிறது.

அமெரிக்காவில் வெளி நாட்டினர் தங்கி பணி புரிய எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் எச்-1பி விசாவுக்காக ஏராளமானோர் விண்ணப்பித்து வருகிறார்கள். ஆனால், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தனது ஆட்சி காலத்தில் எச்-1பி விசா வழங்குவதற்கான நடைமுறையில் கட்டுபாடுகளைக் கொண்டு வந்தார்.

ADVERTISEMENT

வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று டிரம்ப் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தார். இதற்கிடையே புதிய அதிபராகப் பொறுப்பேற்ற ஜோ பைடன் முன்னாள் அதிபர் டிரம்ப் விதித்த பல்வேறு உத்தரவுகளை ரத்து செய்து வருகிறார். எச்-1பி விசா மீதான கட்டுப்பாடுகளையும் விலக்கினார்.

டிரம்ப் ஆட்சி காலத்தில் எச்-1பி விசா விண்ணப்பங்களை முற்றிலுமாக நிராகரிப்பதற்கான அனுமதி குடியேற்ற அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்தக் கொள்கை முடிவைத் திரும்ப பெறுவதாக அமெரிக்க குடியேற்ற நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ADVERTISEMENT

அதன்படி இனி, எச்-1பி விசா விண்ணப்பம் நிராகரிப்பதற்கு முன்பாக என்ன காரணத்துக்காக விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது என்பது குறித்து விண்ணப்பதாரர்களுக்கு நோட்டீஸ் மூலம் தெரியப்படுத்தப்படும்.

இதன்மூலம் விண்ணப்பத்தில் ஏதாவது தவறு இருந்தால் அதை சரி செய்து கொள்ள முடியும். புதுப்பிக்கப்பட்ட இந்தக் கொள்கை மூலம் விண்ணப்பதாரர்களிடம் இருந்து கூடுதல் தகவல் தேவை என குடியேற்ற அதிகாரி முடிவு செய்யும்போது ஆதாரங்கள் தேவை என்றும் விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கான காரணத்தைக் கூறியும் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவதை உறுதி செய்யும். இதனால் விண்ணப்பத்தில் அறியாமல் செய்த தவறு தற்செயலான குறைபாடுகள் சரி செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கும்.

ADVERTISEMENT

இதுகுறித்து அமெரிக்க குடியேற்ற சேவை நிறுவன இயக்குநர் டிரேசி ரெனால்டு கூறும்போது, ‘அமெரிக்காவில் சட்டபூர்வமாக குடியேறுவதில் தேவையற்ற தடைகளை நீக்கவும், குடியேற்ற பயனாளிகளின் சுமையைக் குறைக்கவும் அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரீஸ் நிர்வாகம் முன்னுரிமை அளித்து வருகிறது. அதன்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எச்-1பி விசா விண்ணப்ப நடைமுறையில் மீண்டும் சலுகை அளிக்கப்பட்டுள்ளதால் அதை அதிக அளவில் விண்ணப்பிக்கும் இந்தியர்கள் பயன்பெறுவார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

**-ராஜ்**

.

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share