பெண் போலீசார் குறித்து RED PIX யூடியூப் சேனலில் சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ ஒளிபரப்பியதற்காக அந்நிறுவனத்தின் ஜெனரல் மேனஜேரும் பெலிக்ஸின் மனைவியுமான ஜேன் பிலிக்ஸ் இன்று (மே 15) மன்னிப்பு கேட்டுள்ளார்.
பெண் காவலர்கள் பற்றி இழிவாக பேசி சவுக்கு சங்கர் RED PIX யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். இதுதொடர்பாக சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இதையடுத்து வீடியோவை ஒளிபரப்பிய பெலிக்ஸ் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி திருச்சி மாவட்டம் முசிறி டிஎஸ்பி யாஸ்மின் அளித்த புகாரின் பேரில் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக டெல்லியில் உள்ள பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் முறையிட சென்ற பெலிக்ஸை திருச்சி போலீசார் கடந்த மே 11-ஆம் தேதி கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
தொடர்ந்து அவரை போலீஸ் வேன் மூலம் திருச்சி அழைத்து சென்று திருச்சி மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து பெலிக்ஸை மே 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவிட்டார்.
இந்தநிலையில் சென்னையில் உள்ள பெலிக்ஸ் வீடு மற்றும் RED PIX அலுவலகத்தில் போலீசார் நேற்று (மே 14) சோதனை நடத்தினர்.
இதையடுத்து பெண் போலீசார் குறித்து சவுக்கு சங்கர் பேசியதற்கு மன்னிப்பு கேட்பதாக பெலிக்ஸின் மனைவியும் RED PIX நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜருமான ஜேன் பெலிக்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“சவுக்கு சங்கர் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சில் RED PIX-க்கு உடன்பாடு இல்லை, அது RED PIX-ன் கருத்தும் இல்லை. இருப்பினும் அந்த காணொளியால் காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் வருத்தம் அடைந்திருப்பதால் RED PIX நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது.
கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி Why Savukku Media is Targeted? என்ற தலைப்பில் நமது RED PIX ஊடகத்தின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு, சவுக்கு சங்கரை நேர்காணல் செய்தார்.
அந்த நேர்காணலில் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் குறித்து சவுக்கு சங்கர் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து சவுக்கு சங்கரின் கருத்துதானே தவிர RED PIX ஊடகத்தின் கருத்து அல்ல. பெண்களின் மாண்பையும், சுயமரியாதையையும் மிக உயர்வாக RED PIX ஊடகம் கருதுகிறது.
சவுக்கு சங்கர் பேசிய அந்த சர்ச்சைக்குரிய கருத்து காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே அந்த காணொளியை ஒளிபரப்பியதற்காக RED PIX ஊடகம் மனம்திறந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது. சர்ச்சைக்குரிய அந்த காணொளி, வழக்கு நிலுவையில் உள்ளதாலும், காவல்துறை விசாரணைக்கு தேவைப்படுவதாலும் வேறு யாரும் பார்க்காத வண்ணம் PRIVATE செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நவரச நாயகனின் “அரிச்சந்திரா”: ஆகோஷ் டீமின் மேஜிக்கல் மியூசிக்!