பொன்னியின் செல்வன் -நானே வருவேன்: அதிக தியேட்டர்கள் யாருக்கு? உதயநிதி கையில்!

Published On:

| By Selvam

தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்புக்குரிய படமாக ‘நானே வருவேன்’, சர்வதேச அளவில் ‘பொன்னியின் செல்வன்‘ ஆகிய இருபடங்களும் இந்த மாத இறுதியில் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இரண்டு படங்களின் தமிழ்நாடு திரையரங்க உரிமை தவிர்த்து பிற உரிமைகள் வியாபாரம் முடிந்துவிட்டது.

ADVERTISEMENT

இந்த படங்களின் முதல் பிரதி செலவுக்கான முதலீட்டு தொகை, தொலைக்காட்சி உரிமை, ஓடிடி உரிமைகளை விற்பனை செய்ததன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு கிடைத்துவிட்டது

தமிழ்நாட்டில் திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் வருவாய் இரண்டு படங்களுக்கும் கூடுதல் வருவாய், லாபமாகவே இருக்கக்கூடும்.

ADVERTISEMENT

எனினும் திரையரங்குகளில் ஒரு திரைப்படத்தை பார்ப்பதற்கு, ரசிகர்கள், வெகுஜன மக்கள் வருகை, விற்பனையாகும் டிக்கெட் மூலம் கிடைக்கும் வசூல் கணக்கு முக்கியமானது.

இந்த கணக்கு படத்தில் பணியாற்றிய, தொழில்நுட்ப கலைஞர்கள், நட்சத்திரங்களின் அடுத்த படங்களுக்கான சம்பளத்தை தீர்மானிக்ககூடியதாக இருக்கிறது.

ADVERTISEMENT

தயாரிப்பு நிறுவனம் முன்னணி நடிகர்களை ஒப்பந்தம் செய்ய எளிதில் அணுகவும் உதவிகரமாக இருக்கும்.

திரைப்படங்களின் தமிழ்நாடு ஏரியா உரிமைகள் பிரித்து வியாபாரம் செய்யும் அல்லது வாங்கும் நடைமுறை, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் படங்களை வெளியிட தொடங்கியபின் நின்று போனது.

இந்த நிலையில் தயாரிப்பாளர்களே நேரடியாக வெளியிட வேண்டும் அல்லது உதயநிதி நிறுவனத்திடம் உரிமையை அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப வழங்க வேண்டும். அப்படி ஒரு இடியாப்ப சிக்கலில்” பொன்னியின் செல்வன்” சிக்கிக்கொண்டது.

லைகா நிறுவனத்துடன் இணைந்து இந்தியன்-2 படத்தை ரெட் ஜெயண்ட் தயாரிக்கிறது. அதனால் பொன்னியின் செல்வன் படத்தை அவர்கள் மூலமாக வெளியிட்டாக வேண்டும். அதே வேளை அந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் மணிரத்னம் முடித்துக் கொடுக்கும் வரை அவர் கூறுவதை கேட்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது லைகா நிறுவனம்.

புதிய படங்களை மினிமம் கேரண்டி, அவுட்ரேட் முறையில் வாங்குவதில்லை என்பதை தனது அடிப்படை விதியாக கடைபிடிக்கும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் “பொன்னியின் செல்வன்” படத்தையும் அந்த அடிப்படையில்தான் வெளியிட முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறது.

தனக்கான லாப சதவீதத்தை முதலிலேயே வாங்கிவிட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கும் இயக்குநர் மணிரத்னம் ரெட் ஜெயண்ட் வியாபார முறையை ஏற்க மறுத்துவருகிறார்.

படத்தை வேறு யாரும் அவுட்ரேட், மினிமம் கேரண்டியில் வாங்குவதற்கு விருப்பம் காட்டவில்லை.

‘பொன்னியின் செல்வன்’ படத்தை நம்பிக்கைக்குரிய வெற்றிப்படமாக விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் ஏற்கவில்லை என்பதுடன், இந்தப் படத்திற்கு ரிபீட் ஆடியன்ஸ் வர மாட்டார்கள்.

அதனால் காஞ்சனா, பாகுபலி படத்திற்கு வந்தது போன்று ரிபீட் ஆடியன்ஸ் வர மாட்டார்கள். அதனால் வசூல் சாதனைக்கான வாய்ப்புக்கள் தொலைதூரத்தில்தான் இருக்கும். அதனால் பொன்னியின் செல்வன் படத்தை லைகா – மணிரத்னம் இணைந்து நேரடியாக வெளியிடுவதுதான் சரியாக இருக்கும்.

அதிலும் ஒரு ஆபத்து உண்டு. படம் சுமார் என்றால் தியேட்டரில் காட்சிகள் குறைக்கப்படும். வசூல் குறைந்தால் படத்தை தியேட்டரில் இருந்து தூக்கிவிடுவார்கள்.

அதுவே ரெட் ஜெயண்ட் வெளியீடு என்றால் இது எதுவும் நடக்காது’ என்கின்றனர் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் வட்டாரத்தில்.

நானே வருவேன்

பொன்னியின் செல்வன் படத்துடன் ஒரு நாள் முன்னதாக தனுஷ் நடித்துள்ள”நானே வருவேன்” தமிழ்நாடு முழுவதும் சுமார் 400 திரைகளில் வெளியிட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

11 வருடங்களுக்கு பின் செல்வராகவன் – தனுஷ் கூட்டணியில் தயாராகியுள்ள படம் என்பதால், 18 முதல் 40 வயதான சினிமா பார்வையாளர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது நானே வருவேன் திரைப்படம்.

இந்தப் படமும் தமிழ்நாட்டில் கோவை ஏரியா தவிர்த்து பிற ஏரியாக்கள் வியாபாரம் செய்யப்படாததால், இதுவரை திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்படவில்லை.

இந்தப் படத்தை குறிப்பிட்ட ஏரியாக்களில் வெளியிட ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் கலைப்புலி தாணு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

‘அப்படி நடக்கும்பட்சத்தில்” நானே வருவேன்” செப்டம்பர் 29 அன்று ஒரு நாள் மட்டும் தமிழ்நாட்டில் 800 திரையரங்குகளில் 3500 காட்சிகள் திரையிடும் அதிசயம் நிகழக்கூடும்.

முதல் நாள் மட்டும்” நானே வருவேன்” சுமார் 15 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்யவும் வாய்ப்பு இருக்கிறது. மறுநாள் பொன்னியின் செல்வன் சுமார் 600க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகும்போது” நானே வருவேன்” குறைந்தபட்சம் 350திரைகளில் அதன் வீரியம் குறையாமல் வசூலை குவிக்கும்.

இவை எல்லாம் நடப்பது உதயநிதி ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவில் இருக்கிறது’ என்கிறது தமிழ் சினிமா வணிக வட்டாரம்.

இராமானுஜம்

வெளியானது துணிவு செகண்ட் லுக்!

இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல்

Photo of author
Selvam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share