கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில் சூரல்மலை பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பெரும் அச்சம் நிலவுகிறது. Wayanad Land Slide
வயநாடு மலை மாவட்டத்தில் கடந்த ஆண்டு கனமழை கொட்டித் தீர்த்த போது பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி மலை கிராமங்கள் மண்ணோடு மண்ணாக புதையுண்டன. இந்த பேரழிவில் 400-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தனர். வயநாடு மலை மாவட்டங்களில் வரலாறு காணாத பேரிடர் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
நிலச்சரிவின் பெருந்துயரத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்ட வயநாட்டில் கடந்த சில மாதங்களாக சுற்றுலா பயணிகள் கணிசமாக வருகை தந்தனர். இந்த நிலையில் தென்மேற்கு பருவமழையால் வயநாடு மலைப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. அப்பகுதிகளில் காட்டாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
வயநாட்டில் கடந்த ஆண்டு பேரிடர் மீட்பு பணியின் போது அமைக்கப்பட்ட பெய்லி பாலத்தின் அடியில் காட்டாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பெய்லி பாலம் மீது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சூரல்மலை பகுதியில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் வயநாட்டில் மீண்டும் பேரழிவை ஏற்படுத்தும் நிலச்சரிவு அச்சம் நிலவுகிறது.
வயநாடு மாவட்டம் முழுவதும் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன. வயநாட்டில் கிரானைட் குவாரிகளின் செயல்பாடுகளை நிறுத்தவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே வயநாடு, இடுக்கி மற்றும் மலப்புரங்களில் அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
