வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கிய நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று ராணி பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் நேற்று முதல் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று கூறப்படுகிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்புகள் உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 22) இரண்டு மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திருவள்ளூர், ராணிப்பேட்டையில் இன்று அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பொய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
