கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோன் அருகே இருந்த ஓட்டலில் உள்ள சிலிண்டர் வெடித்ததே பெரும் விபத்துக்கான காரணம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பழையப்பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் நேற்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் 15 பேர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த பெரும் வெடி விபத்தால் பட்டாசு குடோனை சுற்றி இருந்த 5 கட்டிடங்கள் இடிந்து சேதமானது. 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகளில் விரிசல் ஏற்பட்டும், சுவர் உடைந்து சேதமாகியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வருவாய் அதிகாரிகள் பழையபேட்டை பகுதியில் விபத்து நடந்த இடத்தில் சுற்றியுள்ள குடியிருப்பு வீடுகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் வெடிவிபத்து நடந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. ஆகியோர் நேரில் ஆய்வு செய்த நிலையில் தலைமையில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், வெடிவிபத்தில் காயமடைந்து கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு இன்று (ஜூலை 30) உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அரசு அறிவித்த நிதிஉதவிக்கான காசோலையை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ”கிருஷ்ணகிரி பழையபேட்டையில் நடந்த பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்து குறித்து தருமபுரி மாவட்ட தடயவியல் நிபுணர்கள் நேற்று தடயங்களை சேகரித்தனர்.
இதுகுறித்த ஆய்வறிக்கையை இன்று அவர்கள் தாக்கல் செய்தனர்.
அதன்படி, இந்த வெடிவிபத்துக்கு ஒட்டலில் உள்ள சிலிண்டர் வெடித்ததால் தான் அருகில் இருந்த பட்டாசு குடோன் வெடித்து பெரும் விபத்து நிகழ்ந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.
எனினும் தற்போது கிருஷ்ணகிரி முழுவதும் உள்ள பட்டாசு குடோன்களை கண்காணித்து, உரிய ஆவணங்கள் இருக்கிறதா, பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு கூறியுள்ளோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஒரே அறையில் 500 பேர்… கழிப்பறை வசதி கூட இல்லை: மணிப்பூர் சென்ற எதிர்க்கட்சி எம்.பிக்கள் வேதனை!
