நீட் தேர்வு முடிவை வெளியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. Re-examination cannot be conducted
கடந்த மே 4ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. அப்போது, ஆவடியில் உள்ள கேந்திரிய வித்யாலயா சிஆர்பிஎஃப் மையத்தில் மின்சாரம் கட் ஆனதால், தேர்வெழுத மாணவர்கள் சிரமப்பட்டனர்.
இதனால் நீட் தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று அந்த தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 13 மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் கடந்த மே 17ஆம் தேதி உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம், “இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை விளக்கமளிக்க வேண்டும். அதுவரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டது.
இந்தநிலையில் இன்று (ஜூன் 3) மத்திய அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்ற்த்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “மாணவர்கள் கோரிக்கையை மத்திய அரசு கவனமாக பரிசீலித்தது. மின்தடை ஏற்பட்டது உண்மைதான். ஆனால், அப்போதிருந்த வெளிச்சத்தை வைத்து மாணவர்கள் தேர்வை எழுதி, அனைத்து கேள்விகளுக்கும் விடையளித்துவிட்டனர். தேர்வு அறைக்குள் மாணவர்கள் யாரும் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை.
ஆனால் திடீரென நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கோரிக்கை மனுவை பரிசீலிக்க கோரியுள்ளனர். தேர்வை எழுதி முடித்துவிட்டார்கள் என்பதால் மாணவர்களின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. மறுத்தேர்வு நடத்தமுடியாது. நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் தொடர்ந்து ஜூன் 6 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி லட்சுமி நாராயணன் உத்தரவிட்டார்.
வரும் ஜூன் 13ஆம் தேதி நீட் தேர்வு முடிவை வெளியிட தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளது.
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட மத்திய பிரதேச உயர் நீதிமன்றமும் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Re-examination cannot be conducted