கடந்த 18 வருடங்களாக கோப்பைக்காக போராடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் முதன்முறையாக ஐபிஎல் பைனலில் இன்று (ஜூன் 3) நேருக்கு நேர் மோதுகின்றன. RCBvsPBKS : which team going to hold ipl 2025 cup
ரசிகர்களின் பெரும் ஆரவாரத்திற்கிடையே கடந்த மார்ச் 22ஆம் ஆம் தேதி 18 வது ஐபிஎல் சீசன் தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் பஞ்சாப், பெங்களூரு, குஜராத், மும்பை ஆகிய அணிகள் பிளே சுற்றுக்கு தகுதி பெற்றன.
இதில் குவாலிபயர் 1 மூலம் நேரடியாக பெங்களூரு அணியும், குவாலிபயர் 2 மூலம் பஞ்சாப் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.

கடந்த 17 சீசன்களில் பெங்களூரு அணி 3 முறையும், பஞ்சாப் அணி ஒரு முறையும் பைனலுக்கு சென்றன. எனினும் இரு அணிகளுமே அதில் தோல்விக் கண்டு ஏமாற்றமடைந்தன.
இந்த நிலையில் இரு அணிகளும் நேருக்கு நேர் பைனலில் மோத உள்ள நிலையில், முதன்முறையாக கோப்பையை முத்தமிடப் போகும் அணி எது? என்ற கேள்வி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சீசனில் ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி குவாலிபயர் 1 உட்பட 10 வெற்றிகளுடன் கம்பீரமாக 4வது முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அந்த அணியின் நங்கூர பேட்ஸ்மேனாக விராட் கோலி (614 ரன்கள்) உள்ளார். அவருக்கு பக்கபலமாக பில் சால்ட், மயங்க் அகர்வால், ரஜத் படிதார், ஜிதேஷ் சர்மா ஆகியோர் உள்ளனர்.
பவுலிங்கை பொறுத்தவரை வேக பந்துவீச்சில் ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள் மற்றும் புவனேஷ்வர் குமார் உள்ளனர். சுழற்பந்துவீச்சில் குருணால் பாண்டியா மற்றும் சுயாஷ் சர்மா துருப்புச் சீட்டாக உள்ளார்.

ஸ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் அணியும் இதுவரை 10 வெற்றிகளுடன் 2வது முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த அணிக்கு பெரிய பலமாக பேட்ஸ்மேன்களே உள்ளனர். பிராப் சிம்ரன், பிரியான்ஷ் ஆர்யா, ஜோஷ் இங்கிலீஷ், ஸ்ரேயாஸ் அய்யர், நேகல் வதேரா, ஷசாங்க் சிங், ஸ்டோய்னிஸ் என பெரும் அதிரடி பேட்ஸ்மேன்களின் கூடாரமாக உள்ளது.
பவுலிங்கில் அந்த அணியின் பெரும் நம்பிக்கையாக சுழல் பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் உள்ளார். அவருடன் அர்ஷ்தீப் சிங் – ஜேமிசன் வேகக் கூட்டணியும் பெங்களூரு அணிக்கு நெருக்கடி அளிக்கும்.
ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 36 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரண்டு அணிகளுமே தலா 18 முறை வெற்றிபெற்றுள்ளன. நடப்பு சீசனிலும் இரு அணிகளும் சமபலத்துடன் உள்ள நிலையில், இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்பதை உறுதியாக நம்பலாம்.
