தனது சொந்த மைதானத்தில் குறைந்த ஸ்கோர் குவித்து பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் படுதோல்வி அடைந்துள்ளது பெங்களூரு அணி. rcb lost by 5 wickets pbks with low score
மழையால் பாதிக்கப்பட்ட சின்னசாமி மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 18) இரவு 14 ஓவர்களாக குறைக்கப்பட்ட போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் . கடந்த போட்டியில் கொல்கத்தாவை 95 ரன்னுக்குள் சுருட்டிய நிலையில், இன்று பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் தங்களது வேலையை சிறப்பாக செய்தனர்.
அந்த அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதலில் பேட்டிங் செய்த ஆர்.சி.பி அணி 14 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு அதே 95 ரன்னுக்கு சுருண்டது.

அந்த அணி 63 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 70 ரன்களை கடக்குமா என்று சந்தேகம் ரசிகர்களிடம் உண்டானது. எனினும் 10வது விக்கெட்டுக்கு ஹேசல்வுட்டுடன் ஜோடி சேர்ந்த டிம் டேவிட் 26 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் அபாரமாக ஆடி 50 ரன்களை குவித்தார். அதனால் ஆர்.சி.பி அணி 95 ரன்களை எட்டியது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் அணி தரப்பில் அர்ஸ்தீப் சிங், ஜேன்சன், சஹால், ஹர்பிரித் பிரார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினர்.
தொடர்ந்து விளையாடி பஞ்சாப் அணி வீரர்களான பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன், ஸ்ரேயாஸ் ஐயர், ஜோஸ் இங்கிலீஸ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், தேவையான ரன்களை குவிக்க தவறவில்லை.

குறிப்பாக கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடிய நேஹல் வதேரா 3 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 33 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.
இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது பஞ்சாப் கிங்ஸ்.
அதே வேளையில் ஐபிஎல் தொடரில் சொந்த மைதானத்தில் அதிக தோல்விகளை சந்தித்த அணிகள் பட்டியலில் பெங்களூரு அணி (46) முதலிடத்திற்கு முன்னேறியது. இரண்டாவது இடத்தில் 45 தோல்விகளுடன் டெல்லி அணி உள்ளது.
மேலும் அனைத்து அணிகளும் ஏறக்குறைய 7 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், தனது சொந்த மைதானத்தில் ஒரு வெற்றியைக் கூட ருசிக்க முடியாமல் தவித்து வருகிறது ஆர்.சி.பி அணி.