அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் துணை தலைவர் ஆர்.பி.வி.எஸ் மணியன் தனது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் செப்டம்பர் 11-ஆம் தேதி பாரதியும் விவேகானந்தரும் என்ற தலைப்பில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் துணை தலைவர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் சொற்பொழிவாற்றினார்.
அவரது உரையில் அம்பேத்கர், திருவள்ளுவர், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசியதாக விசிக மத்திய சென்னை முன்னாள் மாவட்ட செயலாளர் இரா.செல்வம் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து செப்டம்பர் 14-ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு சென்னை தெற்கு காவல் இணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் ஆர்.பி.வி.எஸ் மணியனை தியாகராயநகரில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆர்.பி.வி.எஸ் மணியன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி அல்லி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆர்.பி.வி.எஸ் மணியன் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் ஆஜராகி,
“தனது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு ஆர்.பி.வி.எஸ் மணியன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அவரது உடல்நிலை, வயதை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்
காவல்துறை தரப்பில் மாநகர சிறப்பு வழக்கறிஞர் சுதாகர் ஆஜராகி, “ஆர்.பி.வி.எஸ் மணியன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ சான்றுகள் இரண்டு ஆண்டுகள் முந்தையது.
அவரது பேச்சு இரு பிரிவினரிடையே பதற்றத்தை உருவாக்கியுள்ளதால் ஜாமீன் வழங்க கூடாது.
அரசியல் சாசனம் என்றாலே அம்பேத்கர் தான் நினைவுக்கு வருவார். அவரை ஆர்.பி.வி.எஸ் மணியன் இழிவுபடுத்தி பேசியுள்ளதை ஏற்க முடியாது” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஜாமீன் மனு மீதான உத்தரவை நீதிபதி அல்லி செப்டம்பர் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
செல்வம்
Comments are closed.