கிச்சன் கீர்த்தனா: மா வற்றல்!

Published On:

| By Kavi

கோடைக்காலத்தில் வற்றல் போட்டு காயவைத்து பெரிய பெரிய பாத்திரங்களில் சேமித்து வைப்பது நம்முடைய வழக்கம். மாங்காய் மலிவாக கிடைக்கும்போது இந்த மா வற்றலை போட்டு வைத்துக்கொண்டால், வருடம் முழுவதும் மாங்காய் தேவைப்படும் நேரங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.    

என்ன தேவை?

பெரிய கிளிமூக்கு மாங்காய் – 5
கல் உப்பு – முக்கால் கப்
மோர் – அரை கப்

எப்படிச் செய்வது?

மாங்காயை நன்றாகக் கழுவி துடைத்துக் கொள்ளவும். தோலுடன் நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய மாங்காய்த் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, இதில் உப்பு, மோர் ஊற்றிப் பிசிறி மூடி போட்டு ஒரு நாள் ஊற வைக்கவும்.

மறுநாள் மாங்காய்த் துண்டுகளை உப்பு நீரிலிருந்து எடுத்து, வெயிலில் காய வைக்கவும். மாலையில் மாங்காய்த் துண்டுகளை இதே உப்பு நீரில் மீண்டும் போட்டு மூடி வைக்கவும்.

இவ்வாறு தொடர்ந்து பாத்திரத்தில் உள்ள உப்பு நீர் வற்றும் வரை மாங்காய் வத்தலை ஊறவைத்து காயப்போடவும்.

பிறகு மாங்காய் வற்றலை இரண்டு நாள் வெயிலில் காய வைத்து எடுத்து வைக்கவும். உப்பு சரியாக இருந்தால், மா வற்றல் ஒரு வருடம் வரை கெட்டுப் போகாது. காய்ந்த மா வற்றல்களை பாத்திரத்தில் அடைத்து வைக்கவும்.

இந்த மா வற்றலைக் கொண்டு, சாம்பார், புளிக்குழம்பு செய்யலாம். புளிக்குழம்பு செய்யும்போது மாங்காய் சேர்ப்பதால் தனியாக புளி சேர்க்கத் தேவையில்லை.

மா வற்றலைக் கொண்டு சாம்பாரை காய்கறி சாம்பார் செய்வது போல செய்யலாம். சாம்பார் வைப்பதற்கு முன் மா வற்றலை தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.

இதில் செய்யப்படும் அவியல் கூட நன்றாக இருக்கும். ஊற வைத்த மா வற்றலில் ஊறுகாயும் போடலாம்.

சம்மரில் சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்!

பனிவரகு காஷ்மீரி புலாவ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share