ரேஷன் கடைகளில், இனி தனித்தனி ரசீதுகள் வழங்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் அரிசி, துவரம் பருப்பு, பாமாயில், கோதுமை, மண்ணெண்ணெய், சர்க்கரை என பல பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புகள் கலந்தே உள்ளது. இதனால் சேர்த்தே ரசீது வழங்கப்பட்டு வந்தது.
மத்திய, மாநில அரசு பொருட்கள் சரியான முறையில் விநியோகம் செய்யப்படுவது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
இதனை தீர்க்கும் வகையில் புத்தாண்டு தினமாக நாளை (ஜனவரி 1) முதல் ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.

இதன்படி மத்திய, மாநில அரசுகளின் பொருட்களுக்கு தனித்தனியாக ரசீது வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் கூட்டுறவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், ஜனவரி 1 முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் மாநில அரசின் கீழ் வழங்கப்படும் அரிசிக்கு தனியாகவும், மத்திய அரசு வழங்கும் அரிசிக்கு தனியாகவும் ரசீது வழங்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஒரு ரேஷன் அட்டைக்கு மொத்தமாக விநியோகிக்கப்படும் 20 கிலோ அரிசியில் மத்திய அரசு வழங்கும் 15 கிலோவுக்கு தனி ரசீதும், மாநில அரசு வழங்கும் 5 கிலோ அரிசிக்கு தனி ரசீதும் வழங்க வேண்டும்.
இந்த புதிய விதிமுறையை கடைபிடிக்காமல் விநியோகம் செய்யும் ரேஷன் கடை ஊழியர்கள் அதற்குண்டான தொகையை சம்பந்தப்பட்ட அலுவலர்களே செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெ.பிரகாஷ்
