மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் இன்று (அக்டோபர் 10) மாலை 4 மணிக்கு நடைபெறும் என மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக இந்திய தொழிலதிபரான ரத்தன் டாடா (வயது 86) மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் கடந்த 7ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார்.
இதனை கேள்விப்பட்ட மஹாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ”மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாநிலத்தில் இன்று துக்கம் அனுசரிக்கப்படும். அவரது இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும். இந்த காலகட்டத்தில், மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். பொழுதுபோக்கு அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படாது” என ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.
இதனையடுத்து இன்று நடைபெறவிருந்த மாநில அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்தது.
டாடாவின் உடலானது பொதுமக்கள் மற்றும் பிரபலங்களின் அஞ்சலிக்காக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தெற்கு மும்பையில் உள்ள தேசிய கலை நிகழ்ச்சிகளுக்கான மையத்தில் (NCPA) வைக்கப்படுகிறது.
அதன் பின்னர் அவரது உடல் வொர்லி மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.
இதற்கிடையே ரத்தன் டாடா மறைவை அடுத்து அரசியல் தலைவர்கள், திரையுலக, விளையாட்டுத்துறை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ரத்தன் டாடா மறைவு : தலைவர்கள் இரங்கல்!
பறிமுதல் செய்யப்பட்ட 123 படகுகளுக்கு தமிழக அரசு ரூ.6.74 கோடி நிவாரணம்!