ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை – தமிழ்நாடு இடையேயான அரையிறுதி போட்டி இன்று (மார்ச் 2) தொடங்குகிறது.
இந்தியாவில் முக்கியத்துவம் வாய்ந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்று இன்று துவங்குகிறது.
ஒரு போட்டியில் விதர்பா – மத்திய பிரதேசம் அணிகள் மோதும் நிலையில், மும்பை பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் நடக்கும் மற்றொரு போட்டியில் 41 முறை சாம்பியனான மும்பை அணியை தமிழ்நாடு அணி எதிர்கொள்கிறது.
இன்று காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ள இந்த போட்டியில் தமிழ்நாடு அணிக்கு சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் திரும்பிய நிலையில், மும்பை அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் திரும்புகிறார்.
தமிழ்நாடு அணி கடைசியாக 1987-88ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின்னர் 6 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையை தவறவிட்டது.
மேலும் கடைசியாக 2016-17ஆம் ஆண்டு ரஞ்சி தொடருக்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்து தற்போது சாய் கிஷோர் தலைமையிலான தமிழ்நாடு அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
காலிறுதியில் நடப்பு சாம்பியன் சவுராஷ்டிரா அணியை 33 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது தமிழ்நாடு அணி.
மிரட்டும் தமிழ்நாடு அணி!
முச்சதம், இரட்டை சதம் என 821 ரன்களை வேட்டையாடி உள்ள நாராயண் ஜெகதீசன் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கிறார். ஒரு சதம் உட்பட 686 ரன்கள் குவித்துள்ள பாபா இந்திரஜித்தும் சூப்பர் பார்மில் உள்ளார்.
இவர்களுடன் பிரதோஷ் ரஞ்ஜன் பால், விஜய் சங்கர் ஆகியோரும் பேட்டிங்கில் கலக்கி வரும் நிலையில், அதிரடி வீரர் சாய் சுதர்சனின் வருகை நிச்சயம் வலு சேர்க்கும். அதே போல் ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரும் அணிக்கு திரும்பி உள்ளது தமிழ்நாடு அணிக்கு வெற்றி வாய்ப்பாக கருதப்படுகிறது.
பவுலிங்கை பொறுத்தவரை நடப்பு தொடரில் 47 விக்கெட்களை வீழ்த்தி உள்ள கேப்டன் சாய் கிஷோர், 41 விக்கெட்களை கைப்பற்றிய அஜித் ராம் ஆகியோரது சுழற்பந்து வீச்சு மும்பை அணிக்கு நெருக்கடி அளிக்கும் என நம்பலாம்.
மும்பை அணி எப்படி?
அதே வேளையில், பரோடா அணிக்கு எதிரான கால் இறுதி ஆட்டத்தினை டிரா செய்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது மூத்த வீரர் ரகானே தலைமையிலான மும்பை அணி. அந்த போட்டியில் சர்ஃபராஸ்கான் தம்பி முஷீர் கான் 203 ரன்கள் விளாசினார். மேலும் 2-வது இன்னிங்ஸில் 10 மற்றும் 11-வது வீரர்களாக களம் கண்ட தனுஷ் கோட்டியன், துஷார் தேஷ் பாண்டே ஜோடி சதம் விளாசி சாதனை படைத்திருந்தனர்.
மும்பை அணியை பொறுத்தவரை பிரித்வி ஷா, பூபேன் லால்வானி, முஷீர் கான், ஷம்ஸ் முலானி, சூர்யான்ஷ்ஷெட்ஜ், ஹர்திக் தாமோர், ஷர்துல் தாக்குர் ஆகியோர் என நீண்ட பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது.
அந்த அணிக்கு இன்னும் பலம் சேர்க்கும் விதமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்குகிறார். தன் மீதான விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவரது ஆட்டம் இருக்கும் என்பதால் தமிழ்நாடு அணிக்கு நெருக்கடியாக அமைய வாய்ப்புள்ளது.
இரு அணி வீரர்களின் பலத்தை தாண்டி, மும்பை கிரிக்கெட் பற்றி ஆழமான புரிதல் கொண்ட பயிற்சியாளர் சுலக்ஷன் குல்கர்னியின் வழிகாட்டல் தமிழ்நாடு அணிக்கு பெரும் துருப்புச் சீட்டாக இருக்கும்.
நடப்பு ரஞ்சித்தொடரின் லீக் சுற்றில் தமிழ்நாடு, மும்பை இரு அணிகளும் ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியை தழுவியுள்ளது.
இந்த நிலையில் ரஞ்சி கோப்பையை கடந்த 36 ஆண்டுகளாக வெல்ல முடியாமல் தவித்து வரும் தமிழ்நாடு அணிக்கு மும்பை அணியுடனான அரையிறுதி போட்டி கடும் சவாலாக இருக்கும் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
எனினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாய் கிஷோர் தலைமையிலான தமிழ்நாடு அணி 3வது முறையாக ரஞ்சி கோப்பையை ஏந்துவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதற்கு மும்பை அணி வழிவிடுமா என்பதை இன்னும் சில நாட்கள் பொறுத்திருந்து பார்க்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா