நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி முடிவடைந்தது. வழக்கமாக நடைபெறும் கூட்டத்தொடரைக் காட்டிலும் இந்த சிறப்புக் கூட்டத்தொடர் காரசார விவாதம், சர்ச்சை பேச்சுகளுடன் தான் முடிவடைந்தது.
கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தின் போது கனிமொழி எம்.பி பேச எழுந்தார். அப்போது பாஜக எம்.பி.க்கள் கோஷம் எழுப்பி கனிமொழியை பேச விடாமல் இடைமறித்தனர்.
இதனால் கோபமடைந்து தனது இருக்கையில் இருந்து எழுந்த தயாநிதி மாறன் எம்.பி., “இதுதான் பெண்களுக்கு மரியாதை கொடுக்கிற லட்சணமா?” என கேள்வி எழுப்பினார்.
மறுநாள் ஆ.ராசா எம்.பி., பேச எழுந்த போது பாஜக எம்.பி.க்கள் இடை மறித்தனர்.
இதனால் ஆவேசமடைந்த தயாநிதிமாறன், பாஜக எம்.பி.க்களை பார்த்து, “உட்கார்ரா… உதை வாங்க போற…“என்னய்யா.. என்னய்யா.. நீ மந்திரிதானே.. நீ மந்திரிதானே” என ஆவேசமாக கத்தினார்.
இதுபோன்று பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஒரு நாளுக்கு முன்னதாகவே சிறப்புக் கூட்டத்தொடர் நடந்து முடிந்தது.
இதில் உச்ச கட்டமாக செப்டம்பர் 21ஆம் தேதி, சந்திரயான் 3 வெற்றி குறித்தான பேச்சின் போது, மக்களவையில் பகுஜன் சமாஜ் கட்சி எம்பியான குன்வர் டேனிஷ் அலியை, பாஜக எம்பி பிதுரி சர்ச்சைக்குறிய வகையில் பேசியதோடு வெறுப்பை கக்கினார்.
டேனிஷ் அலியை சக எம்.பி என்று கூட பாராமல் தீவிரவாதி என்று கூறியதுடன் அவை குறிப்பில் ஏற்ற முடியாத இழிவான வார்த்தைகள் பயன்படுத்தி பேசினார்.
இது எதிர்க்கட்சி எம்.பி.க்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சபாநாயகர் ஓம்.பிர்லா, இனி இப்படி பேசக்கூடாது என்று கூறியதுடன், ரமேஷ் பிதுரி கூறியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்டிருக்கிறேன் என்றார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “ரமேஷ் பிதுரி பேசியது எதிர்க்கட்சிகளின் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
ஆனாலும் கோபம் தணியாத எதிர்க்கட்சி எம்.பி.க்கள், “பாஜக அல்லாத எம்.பி.க்கள் சாதரணமாக பேசினால் கூட சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கிறீர்கள். ஆனால் இவ்வளவு தரக்குறைவாக பேசிய ரமேஷ் பிதுரி மீது நடவடிக்கை எடுக்காதது பிரமிப்பாக இருக்கிறது” என்று கண்டனம் தெரிவித்தனர்.
இதுமட்டுமின்றி திமுக எம்.பி.கனிமொழி தொடங்கி பல எம்.பி.க்களும் ரமேஷ் பிதுரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு கடிதம் அனுப்பினர். டேனிஷ் அலியும் சபாநாயகர் ஓம்.பிர்லாவுக்கு கடிதம் அனுப்பினார்.
அதில், அவையில் நடத்தை விதிகளை மீறி ரமேஷ் பிதுரி பேசியிருக்கிறார். இதுகுறித்து உரிமை மீறல் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ரமேஷ் பிதுரியின் பேச்சால், அன்றைய தினம் இரவெல்லாம் தூங்கவில்லை. தலையே வெடித்துவிடும் போல் இருந்தது. ஒரு எம்பியான எனக்கே இப்படி நடந்தால், சாதாரண மக்களுக்கு என்ன நடக்கும்?” என்று மனம் நொந்து பேட்டி அளித்தார்.
ரமேஷ் பிதுரி மீது சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். அது நடக்காவிட்டால் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறுவது குறித்தும் பரிசீலிப்பேன் என்றும் தெரிவித்தார் டேனிஷ் அலி.
இந்நிலையில் தான் நேற்று (செப்டம்பர் 22) டெல்லியில் இருக்கும் டேனிஷ் அலி இல்லத்துக்கு சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வெறுப்புச் சந்தையில் அன்பு கடையை போடுவோம்” என்று கட்டித்தழுவி ஆறுதல்படுத்தினார்.
இதுகுறித்து டேனிஷ் அலி தனது ட்விட்டர் பக்கத்தில், “நாட்டில் அதிகரித்து வரும் வெறுப்பு கலாச்சாரத்திற்கு எதிரான எனது போராட்டத்தை தொடர உங்கள் திடீர் வருகை எனக்கு மிகுந்த பலத்தை அளித்திருக்கிறது. நன்றி ராகுல் ஜி” என்று பதிவிட்டார்.
பகுஜன் சமாஜ் கட்சி இந்தியா கூட்டணியில் இல்லாத போதும், தனது ஆதரவை ராகுல் காந்தி தெரிவித்தது அரசியல் அரங்கில் பேசு பொருளானது. இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதோடு யார் இந்த டேனிஷ் அலி என்று பலரும் தேட ஆரம்பித்திருக்கிறார்கள்.
யார் இவர்?
உத்தரப் பிரதேச மாநிலம் ஹப்பூரைச் சேர்ந்தவர். குன்வர் ஜாஃபர் அலிக்கும், நஃபீஸ் ஜாஃபர் அலிக்கும் 1975ஆம் ஆண்டு பிறந்தவர். ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றார்.
1994ஆம் ஆண்டு மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மாணவர் பிரிவு தேசிய தலைவராக அரசியலில் நுழைந்தார். 1994ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது ராம்நகரா பகுதியில் பேசிய டேனிஷ் அலியின் பிரச்சார பேச்சு அக்கட்சியின் தேசிய தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவ கவுடாவை ஈர்த்தது.
இதை தொடர்ந்து தேவ கவுடாவுடன் நெருங்கி பழக ஆரம்பித்தார். தேவ கவுடாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறினார். தொடர்ந்து மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் பொதுச்செயலாளர் வரை கட்சி பதவியில் உயர்ந்தார் டேனிஷ் அலி.
20 ஆண்டுகளுக்கும் மேலாக மதச் சார்பற்ற ஜனதா தள கட்சியின் முகமாக அரியப்பட்ட டேனிஷ் அலி 2019 மக்களவைத் தேர்தலின் போது திடீரென மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியில் இருந்து விலகி பகுஜன் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார்.
அப்போது கட்சியின் பொது செயலாளரே மதச் சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து விலகி பகுஜன் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தது விமர்சனத்துக்குள்ளானது.
இதுகுறித்து பேசிய டேனிஷ் அலி, “நான் பிறந்தது உத்தரப் பிரதேசத்தில். ஆனால் பணியாற்றியது கர்நாடகாவுக்காக. உத்தரப் பிரதேசத்தில் அரசியல் சாசனத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் மதவாதம் வளர்ந்து விட்டது. அதனால் மதச் சார்பற்ற ஜனதா கட்சியில் இருந்து விலகி பகுஜன் சமாஜ் வாதி கட்சியில் சேர்ந்தேன். என்றாலும் எனக்கும் தேவகவுடாவுக்கும் இடையே இருக்கும் உறவை யாராலும் பிரிக்க முடியாது. அவரது ஆசி பெற்றுதான் இங்கு வந்தேன்” என கூறினார்.
இதைதொடர்ந்து 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் வாதி கட்சியின் சார்பில் உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா தொகுதியில் போட்டியிட்டார் டேனிஷ் அலி.
இந்த தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக அதிக இடத்தில் அமோக வெற்றி பெற்றிருந்தாலும், முஸ்லீம்கள் அதிகமாக உள்ள அம்ரோஹா மாவட்டத்தில் போட்டியிட்ட டேனிஷ் அலி 63,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக உறுப்பினரான குன்வர் சிங் தன்வரை தோற்கடித்தார். இது டேனிஷ் அலி போட்டியிட்ட முதல் தேர்தல் ஆகும்.
தேசிய அரசியலில் பகுஜன் சமாஜ் கட்சியின் சிறுபான்மையினரின் முகமாக அறியப்பட்டார். மக்களவையில் 10 உறுப்பினர்களைக் கொண்ட பகுஜன் சமாஜ் வாதி கட்சியின் குழு தலைவராக உள்ளார்.
சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடியின் ஒரே நாடு, ஒரே தேர்தலை கடுமையாக விமர்சித்திருந்தார். “ஒரே நாடு, ஒரே மதம், ஒரே தலைவர், ஒரே தொழிலதிபர். இப்படித்தான் நாட்டை ஆளப்போகிறார்களா?. நீங்கள் அரசியலமைப்பை மாற்றினால் இந்த நாட்டில் பதவி வகிக்க முடியாது” என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.
டேனிஷ் அலி கட்சிகளுக்கு அப்பாற்பட்ட அரசியல்வாதிகளுடனும் தொடர்பில் இருப்பவர். அந்தவகையில், பிகாரில் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்துக்கு முன்னதாக, பிகார் முதல்வர் நிதிஷ் குமாரை, டேனிஷ் அலி சந்தித்தது அந்த மாநில செய்தித் தாள்களில் தலைப்புச் செய்தியானது.
அதுபோன்று பாஜகவினரால் டேனிஷ் அலி இப்படி பொதுவெளியில் பேசப்படுவது முதன்முறையல்ல. கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி அம்ரோஹா ரயில் நிலைய மேம்பாட்டு நிகழ்ச்சியில் இவருக்கும் பாஜகவைச் சேர்ந்த ஹரி சிங் தில்லானுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஹரி சிங் தில்லான், பாரத் மாதாகி ஜே என்று சொல்ல, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த டேனிஷ் அலி, இப்படி பேச இதுவொன்றும் பாஜக நிகழ்ச்சி அல்ல என்று கண்டனம் தெரிவித்தார்.
இந்தசூழலில் தான் நாடாளுமன்றத்தில் இவரை பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரி தரக்குறைவாக பேச மீண்டும் அரசியல் அரங்கில் கவனிக்கத்தக்கவராக மாறியுள்ளார்.
அதே சமயம் ரமேஷ் பிதுரி சர்ச்சைக்குரிய வகையில் இப்படி பேசுவது முதன்முறையல்ல.
சர்ச்சை நாயகன் ரமேஷ் பிதுரி
டெல்லியைச் சேர்ந்த ரமேஷ் பிதுரி ஆர்.எஸ்.எஸில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். பாஜகவில் மாணவர் அணி, மாநில துணைத் தலைவர், டெல்லி மாநில பாஜக பொதுச் செயலாளர் என கட்சி பதவிகளை வகித்தார்.
2003-2014 வரை மூன்று முறை எம்.எல்.ஏவாக இருந்த ரமேஷ் பிதுரி 2014 மக்களவைத் தேர்தலில் இந்தியாவின் பணக்கார தொகுதி என்று அழைக்கப்படும் தெற்கு டெல்லியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2019 தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இரண்டாவது முறையாக எம்.பியான ரமேஷ் பிதுரி பல்வேறு அரசியல் தலைவர்களையும் சர்ச்சைக்குரிய வகையில் கடந்த காலங்களில் பேசியிருக்கிறார்.
கடந்த மாதம் டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரமேஷ் பிதுரி, டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது உருவத்தை கேலி செய்து பேசினார்.
முன்னதாக மே 2019 இல், தெற்கு டெல்லியின் மெஹ்ருவாலி பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை தகாத வார்த்தைகளால் திட்டியதற்காக ரமேஷ் பிதுரிக்கு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
2017ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் பேசும்போது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியையும், பகுஜன் சமாஜ் வாதி கட்சி தலைவரான மாயாவதியையும் தரக்குறைவாக பேசினார்.
அதாவது “இத்தாலியில் 5-6 மாதத்துக்குள் ஒரு பேரக்குழந்தை பிறக்கலாம். ஆனால் இந்த கலாச்சாரம் இந்தியாவில் இல்லை” என்று கூறியதுடன் இதுபோன்ற கலாச்சாரம் சோனியா காந்தி, மாயாவதி வீட்டில் இருக்கலாம் என்று கூறினார்.
2015ஆம் ஆண்டு மக்களவையில் தவறான மற்றும் பாலியல் கருத்துக்களை தெரிவித்ததாக சுஷ்மிதா தேவ்(டிஎம்சி), சுப்ரியா சுலே (என்சிபி), ஸ்ரீமதி (சிபிஐ(எம்)) ஆகியோர் ரமேஷ் பிதுரி மீது புகார் அளித்தனர்.
2022ஆம் ஆண்டு பள்ளியில் தனது குழந்தைக்கு ஏற்பட்ட பிரச்சினை ஒன்றுக்காக உதவி கேட்டு ரமேஷ் பிதுரியிடம் ஒரு பெற்றோர் சென்ற போது, நீங்கள் ஏன் முதலில் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறீர்கள்? ” என்று சர்ச்சைக்குரிய வகையில் கேட்டிருக்கிறார்.
இந்தநிலையில் தற்போது டேனிஷ் அலியை தீவிரவாதி என வெறுப்பு பேச்சோடு அறுவறுக்கத் தக்க வகையிலும் பேசியிருக்கிறார்.
அவரது பேச்சு, “எழுத முடியாத அநாகரீகத்தின் உச்சம்” என கூறும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இப்படி தொடர்ந்து பேசி வருபவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் என பாஜக தலைமையிடம் கேட்டு வருகிறார்கள்.
மக்களவையின் மாண்பை குறைக்கும் வகையில் பேசிய ரமேஷ் பிதுரி மீது சபாநாயகரும், பாஜக தலைமையும் நடவடிக்கை எடுப்பார்களா?
பிரியா
துரைமுருகனை வைத்து விளையாட்டா?: அண்ணாமலை கேள்வி!
ரூ.451 கோடியில் வாரணாசி ஸ்டேடியம்: அடிக்கல் நாட்டினார் பிரதமர்!