பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக மீண்டும் மருத்துவர் ராமதாஸை நியமிக்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கடும் அதிகார மோதல் உச்சகட்டத்தை எட்டி உள்ளது.
இந்த சூழலில் சேலம் 5 ரோட்டில் உள்ள ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் இன்று (டிசம்பர் 29) மருத்துவர் ராமதாஸ் தலைமையில் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் அன்புணியை பாமகவில் இருந்து நீக்கியதை செயற்குழு அங்கீகரித்துள்ளது. மேலும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக மீண்டும் ராமதாஸை ஒரு மனதாக தேர்வு செய்வது என பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. Form A, B ஆகியவற்றில் கையெடுத்திடும் உரிமை, கூட்டணி குறித்து பேசுவது உள்ளிட்ட அதிகாரங்கள் ராமதாசுக்கு மட்டுமே உள்ளது என செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ராமதாஸ் வெளியிட்ட வீடியோவில், “பாமகவை, மறுபடியும் மக்களுக்கான கட்சியாக மாற்றுவதற்கான போராட்டம் இது. அன்புமணி பக்கம் இருக்கிற என் தொண்டர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கிறேன். தந்திரங்களுக்கு ஏமாந்துவிடாதீர்கள். ஒரே ஒரு கேள்வி உங்கள் மனசாட்சியிடம் கேளுங்கள். பெற்ற தந்தைக்கே துரோகம் செய்பவர், நாளைக்கு இந்த இயக்கத்தையோ, மக்களையோ காப்பாற்றுவாரா?. எனக்கு வயதாகிவிட்டது. இதுதான் எனது கடைசி யுத்தமாகக்கூட இருக்கலாம். ஆனால், எனது உடம்பில் கடைசி மூச்சு இருக்கும் வரை உங்களுக்காகப் போராடுவேன். கோபத்தில் அல்ல, அறத்தோடு, அன்போட நிற்பேன்.” என தெரிவித்திருந்தார்.
