பாமக உட்கட்சி மோதல் உச்சத்தில் இருக்கும் நிலையில் அக்கட்சியின் ராமதாஸ் பிரிவின் பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 29) சேலத்தில் நடைபெறுகிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையேயான மோதலால் அக்கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது. யார் உண்மையான பாமக? என்பதை சென்னை சிவில் உரிமையியல் நீதிமன்றம் முடிவு செய்யும் என அண்மையில் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
தற்போதைய நிலையில் இருதரப்புமே தாங்களே உண்மையான பாமக என உரிமை கோரி வருகின்றன. இந்நிலையில் சேலத்தில் ராமதாஸ் பாமகவின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இன்றைய பொதுக்குழுவில் 4,300 உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். பாமகவின் செயற்குழுவும் இன்று கூடுகிறது. இதில் 650 பேர் பங்கேற்கின்றனர்.
சேலம் ஐந்து ரோட்டில் உள்ள ரத்தினவேல் திருமண மண்டபத்தில் பாமகவின் இந்த பொதுக்குழு-செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதனையொட்டி அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்றைய பொதுக்குழுவில் தற்போதைய அரசியல் நிலவரம், கட்சி பிரச்சனை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும். இக்கூட்டத்தின் முடிவில், 2026 சட்டமன்ற தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற அறிவிப்பும் வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
