ராமர் பால வழக்கு: அரசியல் சாசன அமர்வில் விசாரணை!

Published On:

| By Kalai

Ram Pala case investigation

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்த பொதுநல மனுவை விசாரணைக்கு பட்டியலிட உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

தனுஷ்கோடியிலிருந்து  இலங்கை கிழக்கு கடற்கரைப் பகுதி வரை சுண்ணாம்பு கற்களாலான பாலம் போன்ற அமைப்பை ராமர் பாலம் என இந்து மக்களின் நம்பிக்கையாக  கூறப்படுகிறது.

ஆனால் அந்த ராமர் பாலம் சேதுசமுத்திர திட்டத்தால் சிதைந்து போகும் எனக்கூறி இந்த திட்டத்திற்கு தடை விதிக்க கோரி பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இவ்வழக்கில் ராமர் பாலத்திற்கு எவ்வித சேதமும் இல்லாத வகையில் சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரி  சுப்பிரமணியன் சுவாமி ஒரு புதிய இடையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

இதனை அடுத்து இவ்வழக்கு கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், அதன் பின்னர் இவ்வழக்கு சிலமுறை விசாரணைக்கு  வந்தபோதும், மத்திய அரசு தனது பதிலை தெரிவிக்காமல் இருந்து வருகிறது.

Ram Pala case investigation

இந்நிலையில், மேற்கண்ட வழக்கு விசாரணையின்போது ராமர் பாலத்தை பாரம்பரிய புராதான சின்னமாக அறிவிக்க முடியுமா ? முடியாதா என்பதே இந்த வழக்கில் எழுப்பப்பட்ட கேள்வியாகும், 

ஆனால், மத்திய அரசு தனது நிலைப்பாட்டை பதில் மனுவாக தாக்கல் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது, இது தொடர் கதையாகி வருகிறது என சுப்பிரமணியன் சுவாமி குற்றஞ்சாட்டினார்

இதனையடுத்து, ராமர் பாலம் தொடர்பான வழக்கில் 6 வாரத்துக்குள் நிலைப்பாட்டை தெரிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து  இந்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,

மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,”இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும், வேண்டுமானல் மனுதாரர் கூடுதல் ஆவணங்களை கோரிக்கையாக உரிய அமைப்பு முன்பு கொடுக்கலாம் என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட சுப்ரமணியன் சுவாமி,

இந்த விவகாரத்தை வேண்டுமென்றே மத்திய அரசு இழுத்தடித்து வருகிறது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக எந்தவொரு அமைச்சரையோ அல்லது அதிகாரிகளையோ நான் பார்க்க விரும்பவில்லை. ஏனெனில் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் இந்த விவகாரம் இடம்பெற்றுள்ளது.

அதனால் இதுதொடர்பான முடிவை முன்னதாக உச்சநீதிமன்றம் வழங்கிய ஆறு வார காலத்திற்குள் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். அதில் ஏதேனும் குழுப்பம் ஏற்படும் பட்சத்தில் நான் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடுவேன் என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரிய விவகாரத்தில் மத்திய அரசின் வாதங்களை நீதிமன்றம் பதிவு செய்வதாகவும், 

மேலும் இவ்விவகாரம் தொடர்பாக, மனுதாரருக்கு  எதிர்காலத்தில் ஏதேனும் நிவாரணம் தேவைப்படும் பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தை மீண்டும் அணுகலாம் எனக்கூறி

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரி சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்த இடையீட்டு மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

ஆனால் சேது சமுத்திர திட்டத்தை, ராமர் பாலம் வழியாக செயல்படுத்துவதற்கு  எதிர்ப்பு தெரிவித்து சுப்பிரமணிய சுவாமி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு நிலுவையில் இருந்தது.

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு அதிக காலம் எடுத்துக்கொண்டு வருவதால், தனது மனுவை அரசியல் சாசன அமர்வு விசாரித்து மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரி இருந்தார்.

இந்நிலையில், சுப்பிரமணியன் சுவாமியின் பொதுநல மனுவை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி நரசிம்மா அடங்கிய அமர்வு இன்று(பிப்ரவரி 16)விசாரித்தது.

அப்போது அரசியல் சாசன அமர்வு இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அரசியல் சாசன அமர்வின் முன் வேறு சில மனுக்கள் இருப்பதால், அவை முடிந்ததும் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலை.ரா

’ஆம்பள…’ எடப்பாடியை காய்ச்சிய கனிமொழி எம்.பி

“ஒரு கோடி ரூபாய் பேரம் பேசினார் கே.பி.முனுசாமி” : அதிமுகவை அதிர வைக்கும் ஆடியோ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share