மேகமண்டலா, சூரியகாந்தி ஆகிய கன்னட சீரியல்களில் அறிமுகமானவர் ரக்ஷிதா மகாலட்சுமி.
விஜய் டிவியில் வந்த பிரிவோம் சந்திப்போம் என்ற தமிழ் தொலைக்காட்சித் தொடரில் ஜோதி என்ற கேரக்டரில் அறிமுகமாகி புகழ் பெற்றார். அப்புறம் சன் டி வி, ஸ்டார் டிவி, கலர்ஸ் டிவி என்று பல தமிழ்ச் சேனல்கள் மட்டுமின்றி. மலையாள தெலுங்கு சேனல்களிலும் பல சீரியல்கள் நடித்தார். பிக்பாஸ் சீசன் 6 இல் கலந்து தொண்ணூற்று ஒன்றாம் நாளில் வெளியேறினார். (அதன் பிறகு பதினைந்து நாட்களில் பிக்பாஸ் முடிந்து விடும் )
சினிமாவில் முதல் அறிமுகமானதும் கன்னடத்தில்தான் . தமிழில் உப்பு கருவாடு படத்தில் அறிமுகமானார். தெலுங்கிலும் பல படங்கள்
இப்படி டிவி சீரியல்கள் மற்றும் சினிமாக்களில் லக்ஷ்மிகரமான முகத்தோடு அஞ்சே முக்காலடி பித்தளைக் குத்துவிளக்காக நடித்து வந்த ரக்ஷிதா மகாலட்சுமி… ரக்ஷிதா ரம்பாவாக மாறி, கவர்ச்சியாக நடித்த படம் ”ஃபயர்” (தமிழ்தான்). அந்த ஒரு காரணத்துக்காகவே குப் பென்று பற்றி எரிந்து ஃபயர் விட்டு லாபம் பார்த்தது அந்தப் படம் .
அவர் அடுத்து கதாநாயகியாக நடிக்கும் படம் 99/66 (தொன்னூற்று ஒன்பது /அறுபத்தியாறு )
மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் , எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை,வசனம், பாடல்கள் எழுதி தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் சபரி, ரோகித் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.
மற்றும் பவன்கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ், அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம், பி.எல்.தேனப்பன், ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் தயாரிப்பாளரும், இயக்குநருமான எம்.எஸ்.மூர்த்தி நடித்துள்ளார்.
” படத்தின் கதை சென்னையில் உள்ள 99 வீடுகள் கொண்ட ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்புப் பகுதியில் நடைபெறுகிறது.
அந்தக் குடியிருப்புப் பகுதியில் அவ்வப்போது நடைபெறும் சில அமானுஷ்ய சம்பவங்கள் அங்கிருக்கும் குடியிருப்பு வாசிகளைப் பயமுறுத்திப் பீதி கொள்ள வைக்கிறது. எதனால் அப்படி நடக்கிறது?அதன் பின்னணியில் இருப்பது என்ன? என்பதை கண்டுபிடிக்க முயல்கிறார்கள். மர்மங்களைக் கண்டுபிடித்து அந்தக் குடியிருப்புவாசிகளைக் காப்பாற்றினார்களா? இல்லையா? இறுதியில் என்ன நடந்தது என்பதே இந்தப் படத்தின் கதை.
இப்படத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் காட்டப்படாத புத்த பிக்குகளின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
அரசு அனுமதி பெற்று தாய்லாந்து, பர்மா, இலங்கை போன்ற பகுதிகளில் புத்த மடலாயத்தின் உள்ளேயே சென்று ஐநூறு புத்த பிக்குகளின் மத்தியில் பாடல்களையும் – சில காட்சிகளையும் பிரம்மாண்டமான முறையில் படமாக்கியுள்ளோம்.”என்கிறார் இயக்குநர் மூர்த்தி.
99 குடியிருப்புகளை விட படத்தில் ரச்சிதாவின் இருப்பு முக்கியம் யுவர் ஆனர்
– ராஜ திருமகன்
