தமிழகம்: அக் -4 ல் மாநிலங்களவைத் தேர்தல்!

Published On:

| By Balaji

^

தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவைத் தேர்தலுக்கு வரும் அக்டோபர் 4 அன்று தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த மே மாதம் மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து அதிமுகவின் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.பி.முனுசாமியும், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்ட வைத்திலிங்கமும் வெற்றி பெற்றனர். இதையடுத்து இருவரும் தங்களது மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்தனர்.

இவ்விரு எம்.பி.இடங்களும் காலியாக உள்ள நிலையில், அதனை நிரப்பத் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பில், “தமிழகத்தில் காலியாகவுள்ள 2 மாநிலங்களவை இடங்களுக்கு வரும் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும். அன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை தேர்தல் நடைபெறும் . அன்றைய தினமே மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதற்காகச் செப்டம்பர் 22ஆம் தேதி வேட்பு மனுவைத் தாக்கல் செய்யக் கடைசி நாள். வேட்பு மனு பரிசீலனை 23ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுவைத் திரும்பப் பெற 27ஆம் தேதி கடைசி நாள்” என்று தெரிவித்துள்ளது.

ஏற்கனவே செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட மாநிலங்களவை பதவிக்கு, திமுக வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share