ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம் ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடிக்கிறார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். ஜீவிதா, செந்தில் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு விஷ்ணு ரங்கசாமி, இசை ஏ.ஆர்.ரஹ்மான், தயாரிப்பு லைகா புரடெக்ஷன்ஸ்.
‘மொய்தீன் பாய்’ எனும் பெயர் கொண்ட இஸ்லாமிய கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்தப்படத்தின் செலவுத் தொகை அதிகரித்தது குறித்த சிக்கல் சினிமா வட்டாரத்தில் விவாதப்பொருளாகியுள்ளது.

இந்தப்படத்துக்கு, ரஜினிகாந்த் சம்பளம் இல்லாமல் சுமார் இருபத்தைந்து கோடி ரூபாய் என பட்ஜெட் கொடுக்கப்பட்டுள்ளது.
படத்தின் வியாபாரத்தில் வரும் தொகையில் குறிப்பிடத்தகுந்த பங்கை ரஜினிகாந்த்திற்கு கொடுப்பதாக லைகா நிறுவனத்தின் சார்பில் கூறப்பட்டிருந்ததாம்.
இப்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையிலேயே அப்படத்தின் செலவு கணக்கு ஐம்பதுகோடியை நெருங்குகிறது என கூறப்படுகிறது.இந்தப்படத்தை தனது மகள் இயக்க வாய்ப்பு வாங்கி கொடுத்தவர் ரஜினிகாந்த். அவர் அதில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறேன் என்று சொல்லிப் படம் உருவாகக் காரணமாக இருந்தவர்.
இப்போது, திட்டமிட்டதைவிடப் பன்மடங்கு அதிகச் செலவாகிவிட்டதால், தன்னுடைய சம்பளத்தில் கைவைத்துவிடுவார்களோ என்கிற அச்சம் ரஜினிகாந்த்துக்கு ஏற்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
இதனால்,வியாபாரத்தில் பங்கு என்பதை விட்டுவிட்டு, ஒரு குறிப்பிட்ட தொகையைச் சொல்லி இதை எனக்குக் கொடுத்துவிடுங்கள் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளாராம்.
ஆனால், லைகா தரப்பில் அதற்கு இதுவரை ஒப்புதல் கொடுக்கப்படவில்லை என்பதுடன் அதனை ஏற்பதற்கு தயாராக இல்லை. மகள் இயக்கியிருக்கும் படம் என்பதால் அதிரடியாக எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதுடன் தனது சம்பளத்தை கறாராக வாங்கிவிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டும் ரஜினிகாந்த் அவராக ஒரு முடிவுக்கு வரட்டும் என காத்திருக்கிறதாம் லைகா நிறுவனம்.
இராமானுஜம்
