தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜாவின் 50 ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் இன்று (செப்டம்பர் 13) பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
உலகளவில் தமிழ் சினிமாவின் அடையாளமாக கருதப்படும் பிரபல இசையமைப்பாளரான இளையராஜா இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் லண்டனில் ‘வேலியண்ட்’ சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இசையுலகையே திரும்பி பார்க்க வைத்தார்.

இந்த நிலையில் இளையராஜாவின் 50 ஆண்டு பொன்விழாவை கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 5.30 மணிக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்துகிறார். சிறப்பு விருந்தினர்களாக தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான கமல்ஹாசன் எம்.பி மற்றும் ரஜினிகாந்த் இருவரும் பங்கேற்கின்றனர்.
இந்த விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக தனது சிம்பொனியை முதன்முறையாக அரங்கேற்றம் செய்கிறார் இளையராஜா. இதனையடுத்து உலகம் முழுவதும் இருந்து பொன் விழாவுக்கு வரும் வெளிநாட்டு இசைக் கலைஞர்களை அழைத்துச் செல்லும் விதமாக தமிழ்நாடு அரசின் சார்பில் பிரத்யேக பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் புகைப்படங்கள் நேற்று வெளியான நிலையில், ’எல்லா பேருந்து பயணங்களிலும் நம்முடன் பயணித்தவர், இப்போது பேருந்தின் வெளியிலும் பயணிக்கிறார்’ எனக் குறிப்பிட்டு அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
