நடிகர் சங்க கடனை அடைப்பதற்கான கலைநிகழ்ச்சியில் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல் இணைந்து நடிக்க உள்ளதாக பொதுக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹேமா கமிட்டி விவகாரம், நடிகர் சங்க கட்டிட விவகாரம், தயாரிப்பாளர் சங்கத்துடனான மோதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு இடையே தென்னிந்திய நடிகர் சங்க 68வது பொதுக்குழு கூட்டம் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் இன்று காலை தொடங்கியது.
நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையிலான இந்த பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகளுடன் ஏராளமான திரைக்கலைஞர்களும் பங்கேற்றுள்ளனர்.
பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பொதுச்செயலாளரான நடிகர் விஷால் சைக்கிளில் வந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கிடையே நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக வங்கியில் வாங்கப்பட்டுள்ள கடனை அடைப்பதற்காக கலைநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு நாடகத்தில் நடிக்க உள்ளதாக சங்கத்தின் பொருளாளரான கார்த்தி அறிவித்துள்ளார்.
நடிக்க வந்த புதிதில் ரஜினி, கமல் இணைந்து தமிழ், இந்தி என 16 படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அந்த வகையில், கடைசியாக இருவரும் கே.பாலசந்தர் இயக்கத்தில் 1982ஆம் ஆண்டு வெளியான அக்னி சாட்சி படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
இந்த நிலையில் சுமார் 42 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக கார்த்தி தெரிவித்துள்ளது இருவரின் ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா