ஆடி அமாவாசையில் ரஜினி செய்த பூஜை!

Published On:

| By Balaji

நடிகரும், ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தின் தலைவருமான ரஜினிகாந்த், கொரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த மூன்று நான்கு மாதங்களாகத் தனது போயஸ் கார்டன் வீட்டிலேயேதான் தங்கியிருக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக ரஜினியின் அரசியல் நடவடிக்கைகள் வேகம் குறைந்துவிட்டன என்று சிலரும், ரஜினி இப்போதைக்கு வெளியே வர மாட்டார் என்றும் பல விமர்சனங்களும் கணிப்புகளும் எழுந்தன.

ஆனால், அவ்வப்போது பொதுப் பிரச்சினைகளுக்குக் கருத்து கூறியதோடு, தனது மக்கள் மன்றத்தினரை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோளும் வைத்து வந்தார் ரஜினி. இந்த நிலையில்தான் நேற்று (ஜூலை 20) காலை ரஜினி மாப்பிள்ளையின் லம்பார்கினி காரில் அமர்ந்து முகக்கவசம் அணிந்து சீட் பெல்ட்டும் அணிந்து போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்டிருக்கிறார் ரஜினி.

ADVERTISEMENT

இந்தப் படம் நேற்று மாலை முதல் சமூகதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. ரஜினிக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்து அது ரஜினிதான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டோம். அதன்பின் ரஜினி எங்கே செல்கிறார் என்று விசாரித்தபோது,

“ரஜினி காந்த் கடந்த சில மாதங்களாக வீட்டிலேயே இருந்ததை வைத்து இனி அவர் அரசியலுக்கு வர மாட்டார் என்று சிலர் தகவல்களைப் பரப்பி வந்தனர். ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது பற்றி தனது வீட்டிலேயே ஆலோசனைகளை மேற்கொண்டிருந்தார். இந்தச் சூழலில் ரஜினி ஒவ்வொரு நாளும் வீட்டில் இருந்தபடியே ஆலோசனைகள் மேற்கொண்டிருந்தார்.

ADVERTISEMENT

ஆடி அமாவாசை அன்று தன் முன்னோர்களுக்கு வழக்கமாக திதி கொடுக்கும் ரஜினி அதுபோலவே நேற்று ஆடி அமாவாசை என்பதால் தன் காரிலேயே வெளியே சென்று திதி கொடுத்துவிட்டு வந்திருக்கிறார். தன் முன்னோர்களின் ஆசிகளைப் பெற்றுக்கொண்ட ரஜினி, ஆடி அமாவாசையான நேற்று தான் பதுங்கியிருப்பவன் அல்ல என்பதையும் நிரூபித்திருக்கிறார். மேலும் ரஜினியின் இந்த போட்டோ மாஸ்க் அணிவது பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது” என்கிறார்கள்.

**-வேந்தன்**

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share