மாஃபா பாண்டியராஜன் குறித்து நான் பேசவே இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று (மார்ச் 10) தெரிவித்துள்ளார். rajendra balaji on mafoi pandiarajan
அதிமுக விருதுநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி, முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக சமீபத்தில் கடுமையாக பேசியிருந்தார்.
சிவகாசியில் கடந்த 7ஆம் தேதி நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசியபோது, “மாவட்டச் செயலாளரான நான் இருக்கும் போது மாஃபா பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்தால் விட்டுவிடுவேனா? பல கட்சிக்கு சென்றுவிட்டு வந்த பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்ததால் நிர்வாகி கன்னத்தில் அறைந்தேன்.
அதிமுக ரத்தம் எனக்குள் ஓடுகிறது. ஆனால் உனது உடம்பில் காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக, அதிமுக, தேமுதிக, ஓபிஎஸ், அதிமுக… வெக்கமா இல்லையா உனக்கு?
கட்சியை காட்டிக்கொடுத்தவர் மாஃபா பாண்டியராஜன். எனக்கு வரலாறு உள்ளது. உனக்கு என்ன வரலாறு இருக்கு? நீ செய்வதெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க நான் கிறுக்கனோ, பைத்தியக்காரனோ அல்ல. தொலைத்துவிடுவேன்” என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.
இந்த நிலையில் நேற்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (மார்ச் 9) காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்! rajendra balaji on mafoi pandiarajan
அப்போது கட்சியினருக்குள் எழும் மோதல் குறித்து பேசிய அவர், “ஜெயலலிதா இருந்தபோது நமது கட்சியை ராணுவ கட்டுப்பாட்டோடு வைத்திருந்தார். ஆனால் இப்போது அந்த கட்டுப்பாட்டில் தளர்வு ஏற்பட்டிருக்கிறது.
உட்கட்சியில் கோஷ்டி பூசல்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. ஆளாளுக்கு இஷ்டப்படி மீடியாக்களில் பேட்டி கொடுக்கிறீர்கள். இதையெல்லாம் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டேன்” எனக் கடுமையாக பேசினார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த கண்டிப்பு குறித்து கோவை விமான நிலையத்திற்கு வந்த ராஜேந்திர பாலாஜியிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.
முடிந்து போன விஷயம்! rajendra balaji on mafoi pandiarajan
அதற்கு அவர், “மாஃபா பாண்டியராஜன் குறித்து நான் பேசவே இல்லை. அதற்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டது. மாஃபா பாண்டியராஜனுக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை. பொதுவான சில விஷயங்களை பற்றி மட்டுமே பேசினேன். முடிந்துபோன விஷயத்தை ஏன் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்” என்று ராஜேந்திர பாலாஜி பேசினார்.