ராஜேந்திர பாலாஜி வழக்கு : 2 வார கெடு – ஆளுநருக்கு உத்தரவு!

Published On:

| By Kavi

ராஜேந்திர பாலாஜி வழக்கு தொடர்பான ஆவணங்களை மொழிப்பெயர்த்து  ஆளுநரிடம் கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Rajendra Balaji case 2 week deadline

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அவர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார் ராஜேந்திர பாலாஜி.

இந்த நிலையில் சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன், 2021 முதல் நிலுவையில் உள்ள ராஜேந்திர பாலாஜி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

எனினும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால், தமிழக அரசுக்கு நீதிமன்ற உத்தரவை பின்பற்ற நேரமில்லை என்று குறிப்பிட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பங்கஜ் மிட்டல், சரசா வெங்கடநாராயண பாட்டி அமர்வு விசாரித்து வருகிறது.

முன்னதாக, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது தமிழ்நாடு அரசின் சார்பில் ‘ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து தமிழக அரசும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நியாயமானதாக இல்லை. ஆளுநரிடமிருந்து ஒப்புதல் பெறுவதில் சிக்கல் உள்ளது’ என்று வாதிடப்பட்டது. 

ராஜேந்திர பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கிரி ஆஜராகி, ” உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

இந்த வழக்கு கடந்த 7ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, ” ஆளுநரிடமிருந்து ஒப்புதல் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது” என்று மீண்டும் தமிழக அரசு சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அப்போது நீதிபதிகள், “மனுதாரருக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரித்தால் என்ன? லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்தால் என்ன ?”என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு ராஜேந்திர பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கிரி, “மனுதாரருக்கு எதிரான புலன்விசாரணை நிறைவடைந்துள்ளது. அவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். தற்போது மீண்டும் சிபிஐ புலன்விசாரணையை தொடங்க வேண்டி இருக்கும்’ என்று வாதம் முன் வைத்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர ஒப்புதல் கோரி தமிழக அரசு எழுதிய கடிதங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரமான பத்திரமாக மார்ச் 17ஆம் தேதி நடைபெறும் விசாரணையின் போது தாக்கல் செய்ய வேண்டும்” என்று ஆளுநரின் செயலாளருக்கு உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு இன்று (மார்ச் 17) விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பில், “முதலில் வழக்கு தொடர்பான முக்கிய விஷயங்களை மட்டும் மொழிப்பெயர்ப்பு செய்து கொடுத்தால் போதும் என்று ஆளுநர் கேட்டார். ஆனால் இப்போது 400 பக்கத்துக்கும் அதிகமான ஆவணங்களை முழுமையாக மொழிபெயர்த்து கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்” என்று கூறப்பட்டது.

அப்போது,  “ஆளுநர் வேண்டும் என்றே காலதாமதம் செய்கிறாரா” என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்,  “இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை ஆவணங்களை மொழி பெயர்த்து ஆளுநருக்கு தமிழக அரசு அனுப்ப வேண்டும்.

இந்த மொழிபெயர்ப்பு ஆவணம் கிடைத்ததும் ராஜேந்திர பாலாஜி மீதான நடவடிக்கைக்கான அனுமதி வழங்குவது தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்க வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் ராஜேந்திர பாலாஜி வழக்கில் சிபிஐ மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க தடை விதிக்கப்படுகிறது” என்று உத்தரவு பிறப்பித்தனர்.  Rajendra Balaji case 2 week deadline

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share