ராஜஸ்தானி உணவுகள், மற்ற இந்திய உணவு வகைகளுடன் ஒப்பிடும்போது தனித்துவமாக இருக்கும். அதற்கு காரணம், இனிப்பு சுவையையும் உணவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பது. அப்படிப்பட்டதுதான் இந்த ராஜஸ்தானி ஆலூ ரெசிப்பியும். நீங்களும் செய்து அசத்தலாம். வீட்டிலுள்ளவர்களின் பாராட்டைப் பெறலாம்.
என்ன தேவை?
உருளைக்கிழங்குகள் (பெரியது) – 3
கெட்டித் தயிர் – 100 மில்லி
தண்ணீர் – 150 மில்லி
கடலை மாவு – 100 கிராம்
உப்பு – ஒன்றரை டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
தாளிக்க…
எண்ணெய் – 3 டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2
பொடியாக நறுக்கிய இஞ்சி – அரை துண்டு
கருஞ்சீரகம் – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை இலைகள் – 10
பெருங்காயம் – கால் டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் தயிர், மஞ்சள்தூள், தண்ணீர், கடலை மாவைச் சேர்த்து கட்டியின்றிக் கரைத்து வைக்கவும். உருளைக்கிழங்கைத் தோல் உரித்து, 6 முதல் 8 சதுர துண்டுகளாக வெட்டி வேக வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தாளிக்க வேண்டிய பொருட்களைச் சேர்த்து தாளிக்கவும். இதில் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, கரம் மசாலாத்தூள், தயிர் கலவை, உப்பு சேர்த்து மூன்று நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
இதில் வேக வைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து ஐந்து நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிட்டு கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.
