மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி வாக்குச் சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் வி. வி. ராஜன் செல்லப்பா தலைமையில் இன்று (நவம்பர் 20) நடைபெற்றது.
மதுரை எல்லிஸ் நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுமார், 500 க்கும் மேற்பட்ட அதிமுகவின் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா,
”திருப்பரங்குன்றம் தொகுதி அஇஅதிமுக வின் முக்கியமான தொகுதியாகும். திருப்பரங்குன்றம் வாக்குச்சாவடி முகவர்களை ஒருசேரப் பார்த்து வாழ்த்து சொல்லும் வாய்ப்பாக இந்நிகழ்ச்சியைப் பார்க்கிறேன்.
நம்முடைய பணி சிறப்பாக இருக்க வேண்டும். இதுதான் நமக்குச் சரியான நேரம்.
எடப்பாடி பழனிசாமி இந்த இயக்கத்தைக் காக்காவிட்டால் என்றோ வீழ்ந்து போயிருக்கும். எடப்பாடி பழனிச்சாமியைச் சுற்றி இருக்கக்கூடியவர்கள் எம். ஜி. ஆரிடம் பயிற்சி பெற்றவர்கள். அவருடன் பயணித்தவர்கள்.
எம். ஜி. ஆர் காலத்தில் தி. மு. க வை எப்படி எதிர்த்தோமோ அப்படிதான் இன்றைக்கும் எதிர்க்கிறோம். சில பேர் திமுக வை எதிர்க்க முடியாமல் இருக்கிறார்கள்.
திமுக வை எதிர்க்கக்கூடிய வலிமை நமக்கு இருக்கிறதென்று அனைவரும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
அதிமுக எல்லா கட்சிகளுடனும் கூட்டணியில் இருந்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியுடன் ஒரு காலத்தில் கூட்டணியில் இருந்திருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணியில் இருந்திருக்கிறது. புரட்சித் தலைவி அம்மா காலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அதிமுக வுடன் கூட்டணியில் தான் இருந்தது.

கூட்டணி என்பது வேறு கொள்கை என்பது வேறு. கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி சிறப்பான முடிவெடுப்பார். எடப்பாடி பழனிசாமி முடிவு தான் எங்கள் முடிவு. அதில் சந்தேகம் இல்லை.
அவருக்கு உள்ள திறமை போல் எவருக்கும் இல்லை. எந்தக் கட்சியினராலும் எடைபோட முடியாத தலைவர் எடப்பாடி. இன்னும் இளைஞர்களை அதிமுக ஈர்க்க வேண்டும்.
எம். ஜி. ஆர் அவர்கள் எங்களுக்கு கற்றுக் கொடுத்த கொள்கை, மக்கள் மனங்கள் தான். அதுதான் எங்கள் கொள்கை.
எந்த அதிகாரியும் அமைச்சர்கள் சொல்வதைக் கேட்பதில்லை. அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் உறவு இல்லை. அமைச்சர்கள் தவறாகப் பேசிவிட்டு பின்னர் மன்னிப்பு கூறும் நிலைமை உள்ளது.
திமுக வுடன் தொடர்பு வைத்தவர்களைத் தான் நம் தற்போது ஒதுக்கியுள்ளோம். 62 எம்.எல். ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளிப்பது சாதாரண விஷயம் அல்ல.
நமக்கு திமுக மட்டும் தான் ஒரே எதிரி. வீட்டு வரியை உயர்த்திய திமுக தான் நமக்கு எதிரி. பால் விலையை உயர்த்திய திமுக தான் எதிரி. சட்டம் ஒழுங்கை காக்கத் தவறிய திமுக தான் எதிரி.
ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் ஆன பிறகுதான் கட்சியின் நிலைமை மோசமாகும். ஆனால் ஒரே வருடத்தில் தற்போது திமுக மோசமாக இருக்கிறது” என்று பேசியிருக்கிறார் ராஜன் செல்லப்பா.
மோனிஷா