ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டதன் மூலம் ரூ. 8,913 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. Railways earned a revenue of Rs. 8,913 crore
இந்திய ரயில்வேக்களில் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் 40% ரயில் கட்டண சலுகையும், 58 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு 50% கட்டண சலுகையும் அளிக்கப்பட்டு வந்தது.
கொரோனா காலக் கட்டத்தில் இந்த கட்டண சலுகையை மத்திய அரசு ரத்து செய்தது. இந்த நடைமுறை இன்னும் அமலில் இருக்கிறது.
இந்தநிலையில் மூத்த குடிமக்களுக்கான கட்டணத்தை ரத்து செய்ததன் மூலம் ரயில்வே எவ்வளவு வருவாய் ஈட்டியுள்ளது என்று ஆர்.டி.ஐ. மூலம் மத்திய ரயில்வே துறையிடம் தகவல் கேட்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் ஆர்டிஐ மூலம் எழுப்பிய கேள்விக்கு, முதியோர், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் என கடந்த 5 ஆண்டுகளில் 31.35 கோடி பேர் பயணம் செய்ததில் ரயில்வேக்கு கூடுதலாக ரூ.8913 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
2020 முதல் 2025 வரை 60 வயதுக்கும் மேற்பட்ட 18.279 கோடி ஆண்கள், 13.065 கோடி பெண்கள் மற்றும் 43,536 திருநங்கைகள் பயணம் செய்துள்ளனர்.
இதற்கிடையே நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘இந்திய ரயில்களில் அனைத்து பயணிகளிடமும் 46 சதவீத சலுகையில்தான் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, மூத்த குடிமக்களக்கான ரயில் பயண கட்டணச் சலுகை மீண்டும் நடைமுறைப்படுத்த வாய்ப்பில்லை’ என்று பதிலளித்திருந்தார்.
ஆனால், மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. வரிகள் மூலம் நாட்டிற்கு பங்களித்த மூத்த குடிமக்களுக்கு வயதான காலத்தில் மத்திய அரசு குறைந்தபட்சம் இந்த நிவாரணத்தையாவது வழங்க வேண்டும் என்று ஆர்.டி.ஐ ஆர்வலர் சந்திரசேகர் கவுர் கேட்டுக்கொண்டுள்ளார். Railways earned a revenue of Rs. 8,913 crore