பாஜக சுஷில் குமார் மோடி தொடர்ந்த அவதூறு வழக்கில் சம்மன் அனுப்பியதை எதிர்த்து ராகுல் காந்தி பாட்னா உயர்நீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 22) மனு தாக்கல் செய்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி பெயர் குறித்து பேசியதற்காக சூரத் நீதிமன்றத்தால் ராகுல்காந்தி ஏற்கனவே குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, 2 ஆண்டு சிறை தண்டனைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து அவரது எம்.பி பதவியில் இருந்தும் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கும் சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதற்கிடையே பீகாரைச் சேர்ந்த பாஜக தலைவர் சுஷில் குமார் மோடி கடந்த 2019ம் ஆண்டு தொடர்ந்த அவதூறு வழக்கு பாட்னா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இதுகுறித்து மார்ச் 31 அன்று விசாரித்த நீதிமன்றம், ஏப்ரல் 12 ஆம் தேதி ராகுல்காந்தி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது. ஆனால் அவர் நேரில் ஆஜராகவில்லை. அப்போது ராகுல்காந்தியின் தரப்பில் கூடுதல் அவகாசம் கோரிய நிலையில், வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பாட்னா நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாட்னா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு வரும் 24ஆம் தேதி நீதிபதி சந்தீப் குமார் அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது.
அவதூறு வழக்கில் அடுத்தடுத்து பின்னடைவுகளை சந்தித்து வரும் ராகுல் காந்தி, இதன்மூலம் தற்போது மேலும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா

Comments are closed.