டெல்லி செங்கோட்டையில் பிரதமர் தேசிய கொடி ஏற்றிய நிகழ்ச்சியை ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் புறக்கணித்தது பேசுபொருளாகி உள்ளது.
நாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லி ராஜ் கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் டெல்லி செங்கோட்டையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இதை தொடர்ந்து பிரதமர் செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி இன்று 12 வது முறையாகத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்நிலையில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவைப் புறக்கணித்தனர்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
கடந்த ஆண்டு சுதந்திர நாள் கொண்டாட்டத்தின் போது டெல்லி செங்கோட்டையில் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்குக் கடைசி வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. இது கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் இந்த ஆண்டு ராகுல் செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின நிகழ்வைப் புறக்கணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
