மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று ஆகஸ்ட் 17′-ந் தேதி முதல் வாக்காளர் உரிமை’க்கான யாத்திரையை பீகாரில் தொடங்க இருக்கிறார்.
இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்கு திருட்டில் ஈடுபடுகிறது என்பது ராகுல் காந்தியின் புகார். கர்நாடகாவின் பெங்களூரு மத்திய தொகுதியில் வாக்குகள் திருட்டு எப்படி நடைபெற்றுள்ளது என்பதை விவரித்து ராகுல் அளித்த பேட்டிகள் பெரும் புயலைக் கிளப்பி இருக்கின்றன.
பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மூலம் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரமும் ஏற்கனவே பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.
இந்த நிலையில் வாக்காளர் உரிமையை வலியுறுத்தி பீகாரில் இன்று ராகுல் காந்தி யாத்திரை மேற்கொள்ள இருக்கிறார். ‘வாக்காளர் உரிமை யாத்திரை’ என்ற பெயரில் ராகுல் காந்தி, பீகாரின் சசாரம் என்ற இடத்தில் இருந்து இந்த பயணத்தைத் தொடங்குகிறார்.
பீகார் மாநிலம் முழுவதும் 16 நாட்கள் இந்த யாத்திரை நடைபெற உள்ளது. பீகார் தலைநகர் பாட்னாவில் செப்டம்பர் 1-ந் தேதி நடைபெறும் பிரம்மாண்டமான இந்தியா கூட்டணி தலைவர்கள் பொதுக் கூட்டத்துடன் இந்த யாத்திரை நிறைவடையும்.
