காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று (ஆகஸ்ட் 12) ஊட்டியில் தோடர் பழங்குடியின மக்களை சந்தித்து உரையாடுகிறார்.
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததையடுத்து அவரது எம்.பி பதவி மீண்டும் திரும்ப பெறப்பட்டது. இதனால் மக்களவையில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார்.
இந்தநிலையில் இன்றும் நாளையும் ராகுல் காந்தி தனது சொந்த தொகுதியான கேரள மாநிலம் வயநாட்டிற்கு செல்கிறார். முன்னதாக அவர் இன்று தமிழகம் வருகிறார்.
டெல்லியிலிருந்து விமானம் மூலம் காலை 9.15 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு ராகுல் காந்தி வருகிறார். அங்கிருந்து கார் மூலம் உதகை அருகே எல்லநல்லி பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். அங்கு முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவை சந்தித்து பேசுகிறார்.
பின்னர் மதியம் 1 மணியளவில் ஊட்டி அருகே முத்தநாடுமந்து என்னும் தோடர் பழங்குடியினர் கிராமத்திற்கு சென்று மக்களிடம் கலந்துரையாடுகிறார். அவர்களது கோவிலையும் பார்வையிடுகிறார். பின்னர் கூடலூர் வழியாக வயநாடு செல்கிறார்.
ராகுல் காந்தி தமிழகம் வருகையால் கோவை, நீலகிரி மாவட்டங்களில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
செல்வம்
