தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் நாளை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஆ.கோபண்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில், அகில இந்திய காங்கிரஸ் தலைமையகமான டெல்லி, இந்திரா பவனில் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்த ஆயத்தக் கூட்டம் நாளை சனிக்கிழமை ஜனவரி 17-ந் தேதி நடைபெற உள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, எம்.பி. மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எம்.பி. ஆகியோர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், தமிழகத்தை சேர்ந்த அகில இந்திய காங்கிரஸ் துணை அமைப்புகளின் தலைவர்கள், முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை சந்திக்க உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக தொகுதிகள்- அதிகாரப் பகிர்வு
2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. ஆனால் திமுகவிடம் அதிக தொகுதிகள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு- கூட்டணி ஆட்சி கோரி வருகிறது காங்கிரஸ்.
காங்கிரஸ் கட்சியின் இந்த நிலைப்பாட்டை திமுக திட்டவட்டமாக நிராகரித்து வருகிறது.
மேலும் விஜய்யின் தவெகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்க வேண்டும் என்ற குரலும் காங்கிரஸ் கட்சியில் ஒருதரப்பினரால் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் டெல்லியில் ராகுல் காந்தி நடத்தும் நாளைய ஆலோசனைக் கூட்டம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
