கேரளாவில் 4ஆவது நாளாக இன்று (செப்டம்பர் 14) காலை 7 மணிக்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கினார்.
பாரத் ஜோடோ யாத்ரா என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கன்னியாகுமரியில் கடந்த 7ஆம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி தொடங்கினார்.
தமிழகத்தின் குமரி மாவட்டத்தில் 4 நாட்கள் பயணத்தை தொடர்ந்து கேரளாவில் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி.
தனது 7வது நாள் நடைபயணத்தை திருவனந்தபுரத்தில் உள்ள கலம்பலம் பகுதியில் நிறைவு செய்தார்.
அதனை தொடர்ந்து இன்று 8வது நாள் நடைபயணத்தை நவைகுளம் சந்திப்பில் இருந்து தொடங்கி உள்ளார். அவரோடு மத்திய, மாநில காங்கிரஸ் தலைவர்களும் இந்த பயணத்தில் பங்கேற்றுள்ளனர். 11 மணிக்கு கொல்லம் சாந்தனூர் பகுதியில் உள்ள எம்பையர் கன்வென்சன் சென்டரில் இந்த பயணம் நிறைவு பெறுகிறது.
பின்னர் மதியம் 2 மணிக்கு கொல்லம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களுடனான உரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்கிறார்.
அதனைதொடர்ந்து 4.30 மணிக்கு சாந்தனூரில் திருமுக்கு சந்திப்பில் இருந்து பாதயாத்திரை மீண்டும் தொடங்குகிறது.
இரவு 7 மணியளவில் பள்ளிமுக்கு சந்திப்பில் நடைபயணம் நிறைவு பெறுவதை தொடர்ந்து மடன்னாடாவில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார் ராகுல் காந்தி.
இந்த ஒற்றுமை பயணத்தில் கேரளாவில் மட்டும் 18 நாள்களுக்கு நடைபயணம் மேற்கொள்கிறார்.
கிறிஸ்டோபர் ஜெமா